நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘திட்டம் இரண்டு’.
இந்தப் படத்தை தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய் பணிபுரிந்துள்ளார். இசையமைப்பாளராக சதீஷ் ரகுநாதன், படத் தொகுப்பாளராக சி.எஸ்.பிரேம் குமார், கலை இயக்குநராக ராகுல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. சென்னையிலேயே ஒட்டு மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக் குழு.
கடந்த ஜனவரி மாதமே படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியது. ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் தாக்குதலால் லாக் டவுன் ஆரம்பித்ததால் இந்தப் படமும் முடங்கிப் போனது.
தற்போதும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் உள்ளது. இதனால் இந்தத் ‘திட்டம் இரண்டு’ படத்தை ஓடிடியில் வெளியிடப் படக் குழு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 30-ம் தேதியன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “மர்டர் மிஸ்டரி திரில்லர் வகையானது இந்தப் படம். ஒரு உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதைதான் இந்தப் படம்.
இந்தப் படத்தில்தான் நான் முதன்முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்றிருக்கிறேன். படத்தில் எனது உயிர்த் தோழி ஒருவர் திடீரென்று காணாமல் போகிறார். அதை விசாரிக்கையில் அவர் கொல்லப்பட்டது தெரிய வருகிறது. அந்த கொலை தொடர்பான விசாரணைதான் இந்தப் படம்.
நான் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் வழக்கமாக படங்களில் காட்டப்படும் பெண் போலீசாக அல்லாமல் காதல், எமோஷனல் எல்லாவற்றையும் காட்டவேண்டிய ஒரு கதாபாத்திரம்.
இந்தக் கொரோனா காலகட்டத்தில் யாருமே எதிர்பாராத அளவுக்கு சினிமா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கும் நான் நடித்த படங்கள் தியேட்டர்களில் ரிலீசாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அதற்கு சாதகமாக இல்லையே…
‘சூரரை போற்று’, ‘க/பெ.ரணசிங்கம்’, இப்போது ‘சார்பட்டா பரம்பரை’ என ஓடிடியில் வெளிவந்த படங்களும் ஹிட் அடிக்கின்றன. படம் நன்றாக இருந்தால் போதும். தியேட்டர் ரிலீஸ் இல்லாவிட்டாலும் ஓடிடியில் எல்லோரையும் சென்று சேர்ந்து விடுகிறது.
ஒரு படத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டே இருப்பது என்பது தயாரிப்பாளருக்கு பலத்த இழப்பை தரும். அதனால் இந்தப் படம் ஓடிடியில் வெளியாவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது. நிச்சயமாக இந்தப் படத்தை ரசிகர்கள் ரசித்து வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்புகிறேன்..” என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.