Friday, April 12, 2024

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை-பாக்யராஜ் அணி வெளிநடப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று காலை துவங்கி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை செல்லாது என்ற அறிவித்த சென்னை உயர்நீதி மன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது.

இதை தொடர்ந்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் செல்லாது என்ற இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் 2019-ல் நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

இந்த ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகரி மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணப்படுகிறது. இதற்காக பள்ளி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக ஓட்டு எண்ணிக்கை துவங்க பாக்யராஜ் தலைமையிலான அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

காரணம் ஓட்டு பதிவான நாளின்போது எவ்வளவு ஓட்டுகள் பதிவானது. இப்போது எவ்வளவு ஓட்டுகள் உள்ளது என்பதை அறிவித்த பின்னர் ஓட்டு எண்ணிக்கையை துவங்கும்படி கேட்டனர். மேலும் பதிவான ஓட்டுகளைவிட கூடுதலாக இப்போது ஓட்டு எண்ணிக்கை உள்ளது என இவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் ஓட்டு எண்ணிக்கை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் அதற்குத் திருப்திகரமான பதிலைச் சொல்லாமல் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அலுவலர் துவக்கியதால் பாக்யராஜ் அணியினர் ஒட்டு மொத்தமாக வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்கள்.

தற்போது ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நேரத்தில் முதற்கட்ட தகவலில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அனைத்துப் பதவிகளிலும் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று மாலைக்குள் முடிவுகள் வரும் என தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News