Thursday, April 11, 2024

தங்கையின் காதலுக்கு ரவுடி அண்ணனின் கடும் எதிர்ப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வி.ஆர்.கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் படம் ‘மஞ்சக் குருவி.’

இந்த மஞ்சக் குருவி’ படத்தில் ரவுடி குணாவாக கிஷோர், கதிராக விஷ்வா, கிஷோர் தங்கையாக நீரஜா மற்றும் கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுஜாதா சிவகுமார், சுப்புராஜ் இவர்களுடன், கதையின் முக்கிய பாத்திரத்தில் மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத் தொகுப்பையும், மிரட்டல் செல்வா சண்டை பயிற்சியையும், சௌந்தர்யன் இசையையும், கபிலன் மற்றும் டாக்டர் கிருதியா இருவரும் பாடல்களையும், ஸ்ரீதர் தயாரிப்பு நிர்வாகத்தையும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை அரங்கன் சின்னத்தம்பியும் செய்துள்ளனர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் அரங்கன் சின்னத்தம்பி பேசும்போது, “அண்ணனின் பெயர் குணா. இந்தப் பெயருக்கு ஏற்றவன் இவன் இல்லை. ஊரே இவனை பார்த்து மிரளும். இவன் பார்வை பட்டாலே பார்ப்பவர் குலை நடுங்கும். அண்ணன் செய்யும் அட்டகாசத்தால் மக்கள் அனைவரும் நடுக்கத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

ரவுடியிசத்தில் உச்சத்தில் திரியும் இவனுக்கு ஒரு அழகான அழகு மங்கை தங்கையாக ஊரில் பவனி வந்தாள். அண்ணனின் ரவுடித்தனம் தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால், அண்ணனோ தங்கை மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தான். ஆனால், அண்ணனின் பாசமோ, அவனின் கனிவான கவனிப்போ அவள் மனதை மாற்றவில்லை.

ஒவ்வொரு நாளும் கனத்த இதயத்துடன் நாட்களை நகர்த்தி வந்த தங்கை பதினெட்டு வயதை கடந்தாள். இந்த நாளுக்காக காத்திருந்த தங்கை அண்ணனையும், வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறுகிறாள். அண்ணன் எவ்வளவோ தடுத்தும் அவளைத் தடுக்க முடியவில்லை.

தனியே வசித்து வந்த அவளை கதிர் காதலிக்க தொடங்கினான். அவன் காதலை அவள் ஏற்காமல் புறக்கணித்து வந்தாள். தனது அண்ணன் ரவுடியாக இருப்பதால் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கதிரிடம் கூறுகிறாள்.

தங்கையை அண்ணனிடம் பேச வைத்து இருவரின் மனதில் உள்ள கசப்பான எண்ணத்தை வேரோடு பிடுங்கி எறிய நினைத்த கதிர் அவளின் அண்ணனிடம் சென்று சேருகிறான்.

அண்ணன் குணாவிற்கு வாழ்வியலை உணர்த்தி, பாசத்தை புரிய வைக்கிறான். அண்ணனும் திருந்தி தங்கையை பார்க்க வருகிறான். அப்பொழுது யாரும் எதிர்பாராத வண்ணம் அந்தத் திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது.

அதன் பிறகு நடைபெறும் சம்பவத்தை விறுவிறுப்பான திரைக்கதையிலும் நறுக் என்ற வசனத்திலும் சொல்லி இருக்கிறேன்” என்று இடைவிடாமல் சொல்லி முடித்தார் இயக்குநர் அரங்கன் சின்னத்தம்பி.

வரும் டிசம்பர்-2-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.

- Advertisement -

Read more

Local News