Friday, April 12, 2024

ரங்கா – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கட்டப்பாவ காணோம்’, ‘சத்யா’ படங்களுக்குப் பிறகு நடிகர் சிபிராஜின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இது.

கடந்த 2017-ம் ஆண்டு ‘பீச்சாங்கை’ என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. அதில் நாயகனுக்கு இடது கை தன்னிச்சையாக செயல்படும். அவனது கட்டுப்பாட்டில் இருக்காது. இதையே கேரக்டர் ஸ்கெட்ச்சாக வைத்து அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்கள்.

இந்தப் படமும் அதே போலத்தான். ஆனால் இடது கைக்குப் பதிலாக வலது கை. முன்னதில் நாயகன் பிக்பாக்கெட்காரன். இதில் சாப்ட்வேர் என்ஜீனியர்  அவ்வளவுதான் வித்தியாசம்.

சிபிராஜ் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு வலது கையை ஏதோ ஒரு வகை சிண்ட்ரோம் நோய் தாக்கியுள்ளது. இதனால் அந்தக் கை அவரது மூளைக்குக் கட்டுப்படாது. அதனால், அந்தக் கையில் எப்போதும் ஸ்லீப்பிங் பந்தினை வைத்திருப்பார்.

இந்த வியாதியால் அவர் பல்வேறு பிரச்சினைகளை தினம்தோறும் சந்தித்து வந்தாலும் இந்த வியாதிக்கு மருந்து இல்லை என்பதால் பந்தை வைத்து சமாளித்து வருகிறார்.

இந்த வியாதியினால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் நாயகி நிகிலா விமலுடனான சிபிராஜின் முதல் சந்திப்பு கோணல் மாணலாகிறது. சிபிராஜின் அதே அலுவலகத்தில் வேலை செய்ய வந்த நிகிலா விமல், சிபியின் பிரச்சினையை அறிந்து அவர் மீது பரிதாபப்படுகிறார்.

அந்த பரிதாபமே காதலாக மாறுகிறது. இந்தக் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ள இருவருக்கும் சுபயோக, சுபதினத்தில் கல்யாணமும் நடக்கிறது.

இருவரும் தேனிலவுக்காக இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் குலுமணாலிக்குச் செல்கிறார்கள். அங்கே ஹோட்டலில் தங்கி ஹனிமூனை கொண்டாடுகிறார்கள்.

அந்த ஹோட்டலில் ஹனிமூன் தம்பதிகளின் அறையில் ரகசிய கேமிராவை வைத்து நடப்பவைகளை வீடியோவில் பதிவு செய்து அதை வெளிநாட்டு இணையத்தளங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

இதைக் கடைசி நேரத்தில் கண்டறியும் சிபிராஜை ஹோட்டலிலேயே இருக்கும் கூட்டம் தாக்குகிறது. இந்தத் தாக்குதலில் நிகிலா விமலும் சிக்கிக் கொள்கிறார். வெளியே தப்பித்துப் போக முடியாமல் அந்த ஹோட்டலிலேயே பதுங்குகிறார்கள் தம்பதிகள் இருவரும்.  

இந்த இருவரையும் கொலை வெறியோடு துரத்துகிறது அந்த ரவுடிக் கும்பல். அவர்களிடமிருந்து இவர்கள் தப்பித்தார்களா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சிபிராஜூக்கு என்ன வருமோ அதைத்தான் செய்திருக்கிறார். அந்தக் கையை வைத்துக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளில் அவருடைய பதட்டமும், படும் அவஸ்தையும்தான் இதுவரையிலும் அவர் காட்டியிருக்காத நடிப்பைக் காட்டுகிறது. சண்டை காட்சிகளில் மேலும், மேலும் முன்னேற்றமாகியிருக்கிறார். இதேபோல் காதல் காட்சிகளிலும் கொஞ்சம் தனித்துவமாக செய்வாராயேனால் அடுத்தடு்த்த பட இயக்குநர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

நாயகியாக நிகிலா விமல். தன் கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவருக்கான காதல் காட்சிகளில் இவரை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம். மலையாளப் படங்களில் இவருடைய அழகான முகத்துக்காகவே பிரைம் பை பிரேம் காதலை வழியவிடுகிறார்கள் மலையாள இயக்குநர்கள். இதில் கொஞ்சமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

சதீஷ் சில காட்சிகளில் நண்பனாக வந்து சிரிக்க வைக்கிறார். மனோபாலா உள்ளாடை அணியும் காட்சியில் கலகலக்க வைத்திருக்கிறார். அக்மார்க் அம்மாவாக ரேணுகாவும் தனது பங்களிப்பை சரியாகச் செய்திருக்கிறார். வில்லன் கூட்டம் மொத்தமும் வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறது.

படம் தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவுக்கு சறுக்கலை கொடுக்கிறது. போனது குலுமணாலி. இயற்கைப் பிரதேசம். எத்தனையோ படங்களை போல எவ்வளவோ அழகினைக் கொடுத்திருக்கலாம். ஆனால் பல காட்சிகளில் இயற்கை அழகையே காணவில்லை. கிரீன்மேட் பின்னணியில் பல காட்சிகளை எடுத்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. பல காட்சிகளில் இருட்டு மயமாக உள்ளது.

வெறுமனே சண்டை காட்சிகளை மட்டும் சிறப்பாக வைத்திருந்து என்ன புண்ணியம்.. அதிலும் பயங்கர லாஜிக் எர்ரர்.. செல்போன் என்ற ஒரு விஷயத்தையே சுத்தமாக மறந்துவிட்டு இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர். இது பல வருடங்களாக உள்ளூரில் நடக்கும் விஷயம் என்று சொல்லியிருப்பதே முரண்பாடானது.

சிம்பிளான கதையென்றாலும் அரதப் பழசானதாக இருப்பதுதான் பிரச்சினை. அந்தக் கையை வைத்துதான் ஜெயிக்கிறார் என்பது போலவாவது திரைக்கதையை அமைத்திருக்கலாம். ஆனால், இது போன்று திரைக்கதையில் எந்த சுவாரசியமாக இல்லாதது பாதி படத்திலேயே போர் அடிக்க வைக்கிறது. இந்த ‘ரங்கா’ என்ற டைட்டிலுக்காகவாவது யோசித்து கதை செய்திருக்கலாம்..!

எவ்வளவோ அடித்து ஆடுவதற்கு ஏற்ற மைதானமாக இருந்தாலும் ரன் அவுட் ஆன கதையாகத்தான் இருக்கிறது இந்தப் படம்..!

இந்த ‘ரங்கா’ – ராங்காகிவிட்டது..!

RATING : 2 / 5

- Advertisement -

Read more

Local News