Friday, April 12, 2024

“பஞ்சு அருணாச்சலம் இல்லைன்னா எங்க பரம்பரையே இல்லை” – கங்கை அமரனின் நன்றி பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை கொண்ட பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 ஆண்டு விழா, இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ‘இசை ஞானி’ இளையராஜா இருவரின் தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவினை PA Art Productions மற்றும் Black Sheep நிறுவனங்கள் இணைந்து வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளனர்.

இவ்விழாவை அறிமுகப்படு்த்தும் நிகழ்ச்சி சமீபத்தில் தி பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், ஆர்.கே.செல்வமணி,  அன்பு செழியன், காட்ரகடா பிரசாத், உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவிற்கான லோகோவை அறிமுகப்படுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களை பாராட்டும் நோக்கில்
மூத்த பத்திரிக்கையாளர்களான தேவிமணி, தேவராஜ், கலைப்பூங்கா TN ராவணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “எதைச் செய்தாலும் அதில் வித்தியாசம் காட்டக் கூடியவர்கள் ஆர்.ஜே.விக்னேஷ், சுட்டி அரவிந்த். பிளாக்‌ஷிப்பின் கடுமையான உழைப்புதான் அவர்களது வளர்ச்சிக்கு காரணம். சோ உடைய நாடகங்கள் போல், இவர்கள் நாடகம் இருக்கும்.

திரையுலகில் பெரியளவில் பாராட்டுகளை பெறாத திறமைசாலி பஞ்சு அருணாச்சலம். அவருடன் நான் வெகுநாட்கள் பயணம் செய்து இருக்கிறேன். அவருக்கு இவ்வளவு நாட்கள் பாராட்டுகள் வழங்கப்படாதது வருத்தம். இப்போது இது நிகழவிருப்பது பெரிய சந்தோசம்.. என்றார்.

கலைப்புலி தாணு பேசும்போது, “50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்தவர் சரித்திரம் படைத்தவர். எழுத்தால் தமிழ் சினிமாவில் எண்ணிலடங்கா வெற்றிகளை தந்தவர் பஞ்சு அருணாச்சலம் அவருக்கு நடைபெறும் இந்த பாராட்டு விழாவிற்கு நான் உறுதுணையாக இருப்பேன்..” என்றார்.

இயக்குநர் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இங்கு வந்த பிறகு இரண்டு நிகழ்ச்சிகள் நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு கௌரவிக்கப்படும் பத்திரிக்கையாளர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். தேவராஜை நான் அறிமுகப்படுத்தியதை சொன்னார். இந்த மண்டபமே நன்றியால் நிறைந்த மண்டபமாக இருக்கிறது.

ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ என ரஜினி சார் வாழ்வை மாற்றிய படங்களை தந்தவர் பஞ்சு சார். அதே போல் கமல் சாரை ‘சகலகலாவல்லவன்’ போன்ற படங்கள் மூலம் மாஸாக மாற்றியவர்.

அந்த காலத்தில் பஞ்சு சார் கதையென்றால் முன்னணி நட்சத்திரங்கள் கேள்வி கேட்காமல் நடிப்பார்கள். அவருக்கு விழா எடுப்பது எழுத்தாளர்களுக்கு எடுக்கும் விழா. அந்த விழாவில் அவரால் பயனடைந்தவர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

இசையமைப்பாளர் இயக்குநர் கங்கை அமரன் பேசும்போது, “எங்கள் குடும்பத்தில் நடக்கும் விழாவில் பேசுவது போல் உள்ளது. அண்ணன் பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் எங்கள் பரம்பரையே இல்லை. அவர் போட்ட பிள்ளையார் சுழிதான் எங்கள் வாழ்வை ஆரம்பித்து வைத்தது. அண்ணன் இருக்கும்போதே அவருக்கு விழா எடுக்க வேண்டும் என நினைத்தோம். இப்போது நடப்பது மகிழ்ச்சி. இளையராஜா அண்ணனை தூக்கி விட்டது பஞ்சு அண்ணன்தான். அதே போல் என்னை வளர்த்து விட்டவர் பாரதிராஜாதான். அவருக்கும் நன்றி. இந்த விழா நடக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்…” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, “பஞ்சு ஒரு மென்மையான மனிதர். நான், இளையராஜா, கங்கை அமரன் எல்லாரும் அவரால் வளர்ந்தவர்கள்தான். அவர் இல்லையென்றால் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்க மாட்டார்.

என்னுடைய  அனைத்து படங்களையும் அவருக்கு போட்டுக் காட்டுவேன், அவர் அதில் திருத்தங்கள் சொல்வார். அது என் படத்தின் வெற்றிக்கு பெரும் உதவியாய் இருக்கும்.

பஞ்சு அருணாச்சலம் உடைய பங்கு தமிழ் சினிமாவில் அதிகம். அவர் திறமையான எழுத்தாளர். அவருக்கு விழா எடுப்பது நமது கடமை. அவருடைய விழாவிற்கு தமிழ் திரையுலகம் முழுமையாக வர வேண்டும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News