Friday, April 12, 2024

நடிகை மஞ்சு வாரியருக்கு மலையாள இயக்குநர் கொடுத்த லவ் டார்ச்சர்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல மலையாள இயக்குநரான சணல்குமார் சசிதரன், நடிகை மஞ்சு வாரியருக்கு காதல் டார்ச்சர் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்திய இயக்குநர்களில் ஒருவர் சணல்குமார் சசிதரன். ‘Oraalppokkam’, ‘Ozhivudivasathe Kali’ ‘Sexy Durga’, ‘Unmadiyude Maranam’, ‘Ah’r Kayyattam’,’ Vazhakku’, ‘Chozha’ ஆகிய படங்களை இயக்கிய பல்வேறு விருதுகளை வாங்கியவர்.

இவருடைய இயக்கத்தில் உருவான ‘கயாட்டம்’ என்ற படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் நடித்திருந்தார்.

இந்தச் சூழலில் சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் மீது பரபரப்பான புகார் ஒன்றை எழுப்பியிருந்தார் இயக்குநர் சணல்குமார் சசிதரன்.

அதில், நடிகை மஞ்சு வாரியார் காணாமல் போய்விட்டார் என்றும், அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருக்கிறார் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதில் வராமல் போக, தொடர்ந்து 4 நாட்கள் கழித்து மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவொன்றை எழுதினார் சணல்குமார் சசிதரன்.

அதில், “கடந்த ஒரு வார காலமாக காணவில்லை. எனது புகாருக்கு மஞ்சு வாரியரோ, அவர் சம்பந்தப்பட்டவர்களோ விளக்கம் அளிக்கவில்லை. மஞ்சு வாரியர் கந்து வட்டி கும்பலின் பிடியில் சிக்கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மஞ்சு வாரியரை காணவில்லை என அவரது மேனேஜருக்கு டேக் செய்து பதிவு போட்டிருந்தபோதிலும் எந்தத் தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை…” என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார் சணல்குமார்.

மேலும், “மஞ்சு வாரியர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய நான் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. காரணம் எனக்கு சட்டம் மீது நம்பிக்கை இல்லை. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நான் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.

திருநங்கை ஷாலு மரணம் முதல் மஞ்சு வாரியர் வழக்குவரையிலும் பல்வேறு சம்பவங்களில் கேரளாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மேலும் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப், விசாரணை அதிகாரிகளை தாக்குவதற்கு சதி திட்டம் தீட்டியது தொடர்பாக மஞ்சு வாரியர் சாட்சியம் அளித்ததால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. சமூக வலைத்தலங்களில் நான் எழுதும் பதிவுகளுக்கு மஞ்சு வாரியர் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காததால் எனது சந்தேகம் வலுப்பதாகவும்“ சணல்குமார் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகை மஞ்சு வாரியர் கொச்சியில் உள்ள எலமான்கரை போலீஸ் ஸ்டேஷனில் இயக்குநர் சனல்குமார் சசிதரன் மீது புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “இயக்குநர் சணல்குமார் சசிதரன் என்னை குறித்து தொடர்ந்த அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.  

மேலும் அந்தப் புகாரில் சனல்குமார் சசிதரன் மீது மஞ்சு வாரியர் அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.

அதில், “சனல் குமார் சசிதரன் இயக்கிய கயட்டம்’ திரைப்படத்தில் நடித்தபோது அவர் என்னை காதலிப்பதாக கூறினார், ஆனால், அதை நான் ஏற்க மறுத்து விட்டேன். அதன் பிறகும் அவர் தொடர்ந்து என்னை காதலிப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தார். அவரின் நடவடிக்கையை நான் கண்டித்தேன். ஆனால், அவர் விடாமல் தொடர்ந்து என்னை காதலிப்பதாக கூறி என்னை  டார்ச்சர் செய்து வருகிறார்..” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மஞ்சு வாரியரின் இந்தப் புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள இயக்குநர் சணல்குமாரின் வீட்டிற்கு வந்த போலீஸார், அவரைக் கைது செய்து கொச்சிக்கு அழைத்து வந்தனர்.

அப்போது வேண்டுமென்றே தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தச் சம்பவத்தை நேரலை செய்தார் இயக்குநர் சணல்குமார். தன்னை யாரோ கடத்துவதாக அதில் பேசினார். மேலும் தன்னை போலீஸார் துன்புறுத்துவதாகவும் கதறினார்.

கடந்த புதன்கிழமை இரவு 9 மணிக்கு கொச்சியில் உள்ள எலமன்கரா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட சணல்குமாரிடம் வழக்கு பற்றி உயரதிகாரிகள் விசாரித்தனர். பின்பு மறுநாள் வியாழக்கிழமை காலையில் அவரை ஜாமீனில் விடுவிக்க போலீஸார் முடிவெடுத்தனர்.

சணல்குமாரின் உறவினர்கள் ஜாமீன் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் முடித்த பின்பும் சணல்குமார் “நான் ஜாமீனில் போக மாட்டேன். என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்…” என்று அடம் பிடித்திருக்கிறார்.

இதனால் வேறு வழியில்லாமல் போலீஸாரும் ஒரு நாள் தாமதித்து நேற்று காலை அவரை ஆலுவாவில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை பதிவு செய்த சணல்குமார் ஜாமீனில் விடுதலையாகி வெளியேறினார்.

நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய இயக்குநர் சணல்குமார், “நான் மஞ்சு வாரியரை டார்ச்சர் செய்யவில்லை. அவரைக் காதலிப்பதாக நான் சொன்னது உண்மைதான். அதில் ஒன்றும் புதுசில்லையே.. அவருடைய வாழ்க்கை மிகவும் ஆபத்தில் உள்ளது. அதைத்தான் அவருக்குச் சொல்ல முயற்சித்தேன்.

என் இயக்கத்தில் அவர் நடித்த ‘கயாட்டம்’ படம் இன்னும் வெளியாகவில்லை. அதைப் பற்றி அவரிடம் பேசுவதற்கு மிகவும் முயற்சி செய்தேன். அதுவும் முடியவில்லை. போலீஸும், நீதிமன்றமும் இதில் இருக்கும் மர்மத்தை வெளியில் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News