எம்.ஜி.ஆருக்கு அரசியல் வழிகாட்டி அறிஞர் அண்ணா என்றால் திரைத்துறையில் வழிகாட்டி கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்.
எம்.ஜி.ஆர். திரைத்துறையில் வளர்ந்துகொண்டு இருந்த நேரம். அப்போதே கலைவாணர் உச்சத்தில் இருந்தார். இருவரும் ஒரு படப்பிடிப்புக்காக கொல்கத்தாவிற்கு சென்று இருந்தனர்.
காட்சி ஒன்றுக்காக எம்.ஜி.ஆர், சற்று உயரமான இடத்தில் இருந்து தாவிக் குதித்தார். அப்போது அவரது செருப்பின் வார் அருந்து விட்டது.
படப்பிடிப்பு முடிந்தவுடன் எம்.ஜி.ஆர்., “புது செருப்பு வாங்க வேண்டும், கடைக்குப் போகலாம்” என்றார். உடனே கலைவாணர், “நாளை காலை வாங்கி கொள்ளலாம்” என்று சொன்னார்.
மறுநாள் காலையில் என். எஸ் .கே ஒரு பேப்பரில் சுருட்டிய பொருளை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார். அதை வாங்கிய எம்.ஜி.ஆர் பிரித்து பார்த்தார். அதில் அவருடைய பழைய செருப்பு தைக்கப்பட்டு, பாலிஷ் போட்டு புதிது போலவே இருந்தது.
என். எஸ்.கே, “ராமச்சந்திரா நீ வாங்கும் சம்பளம் குறைவு. அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். உன் பழைய செருப்பை தைத்து விட்டேன். நிச்சயமாக ஆறு மாதங்கள் உழைக்கும் ”என்று கூறினார்.
இதை ஒரு பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்ட எம்.ஜி.ஆர்., “கலைவாணரிடம்தான் சிக்கனத்தைக் கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.