நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றியைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் அடுத்ததாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கும் என கூறப்பட்டாலும், இது இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த வருடம் முடிவடையும் நேரத்தில் தான் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பிருக்கிறது, அதன்பின் அடுத்த ஆண்டில் இரண்டாம் பாகம் வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே இருக்கமாட்டார், அவர் விலகியிருக்கிறார் அல்லது நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக பாலிவுட் ஊடகங்களில் பரவிக் கொண்டிருந்தது. பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகியதனால், ‘கல்கி 2’ திரைப்படத்திலிருந்தும் அவர் விலகியிருக்கலாம் என கூறப்பட்டது.ஆனால், புதிய தகவலின்படி ‘கல்கி 2’ திரைப்படத்தின் 60 சதவிகிதப் படப்பிடிப்பு, முதலாவது பாகம் எடுக்கும்போதே தயார் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 40 சதவிகிதம் மட்டும் தற்போது படமாக்க வேண்டியுள்ளது. தீபிகா இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்து நடித்துவருகிறார் என்பதற்கான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.