தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு விதமான கதைகளில் நடித்துவருகிறார். தற்போது, கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகி வரும் கராத்தே பாபு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் பராசக்தி என்ற படத்தில் ரவி மோகன் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களுக்கு அடுத்து, டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், ரவி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய திரைப்படத்தை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஒரு டபுள் ஹீரோ கதையம்சத்தை கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.