தமிழ்த் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் தயாரிப்பதில், அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ் பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.
அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள, ‘ஜென்டில்மேன்-2’ படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு தங்க காசு பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர். சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் முதல் பல ஜாம்பவான்களை திரையுலகில் உருவாக்கிய பெருமை அவரையே சேரும்.
பிரம்மாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக் காட்டியவர். பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் ஆரம்பத்தையே அதிரடியான அறிவிப்புடன் செய்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
தற்போது ‘ஜென்டில்மேன்-2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில் நுட்பக் குழுவினர் எவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளது.
ஆனால் அந்த அறிவிப்புக்கு முன்பேயே அந்த அதிர்ஷ்டக்கார இசையமைப்பாளர் யாரென்று சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகளை பரிசாகத் தருவதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.