Thursday, April 11, 2024

“வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி  சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது.  படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ.ஆர்.ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர்.  இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...” என்றார்.

நடிகை ராதிகா பேசும்போது, “இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.  பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. இந்த படத்திற்கு  அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஒரு பெரிய பலப்பரிட்சை தான். இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது.  சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தை பல தடைகளை தாண்டி உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.

கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் எப்பொழுதும் சிறப்பான படத்தை கொடுப்பதற்காக உழைக்கிறார்கள். பல திறமையாளர்களை அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  இந்த திரைப்படத்தில் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர்.  அவர்களது கடின உழைப்பில் இந்த படம்  சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மாறிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.  பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இந்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக  அமைந்ததற்கு இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள்தான் காரணம். அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  படத்தை முதலில் நான்தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப் படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு  இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக் கொண்டதால்தான் நான் இந்தப் படத்தை வெளியிட்டேன். அவர் கூறிய வார்த்தைகளின்படி படம் மிகப்ப ெரிய வெற்றியடைந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ‘வெந்து தணிந்தது காடு’ பாகம் இரண்டிற்காக  நான் ஆவலாக  இருக்கிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, “இந்தப் படத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை கௌரவிப்பதற்காகத்தான் இந்த விழா நடத்தப்படுகிறது. ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை வாங்கியவுடன் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் சிம்புதான். இதுபோன்ற பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வேண்டும். இயக்குநர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பத்தை கொடுத்துள்ளார். எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்களையும். நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News