Friday, April 12, 2024

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி மீது மோசடிப் புகார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை தருவதாக கூறி 15 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் மாலிக் ஸ்டிரிம்ஸ் கார்ப்பரேஷன். இதன் தமிழ்நாட்டு கிளை நிர்வாக இயக்குனர் ராஷிக் அகமது கனி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி, தன்னிடம் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் விநியோக உரிமைகள் இருப்பதாக கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் நிறுவனத்திடம் 30 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதன் பின்பு விசாரித்தபோது ‘பேட்ட’ படத்தின் வினியோக உரிமை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் பொழுது கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 15 கோடி ரூபாய் பணத்தில் 5 கோடி ரூபாய்க்கு முன் தேதியிட்ட காசோலையும், மீதமுள்ள 10 கோடி ரூபாய் பணத்திற்கு ‘காஞ்சனா-3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ ஆகிய திரைப்படங்களின் விநியோக உரிமையை தருவதாக கூறி மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் ‘காஞ்சனா-3’ படத்தின் விநியோக உரிமை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பதும், நான் ருத்ரன்’ படம் இயக்கப்படாமலேயே கை விடப்பட்டதும் பின்புதான் தமக்குத் தெரிய வந்தாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 5 கோடி ரூபாய்க்காக கொடுத்த காசோலையும் முரளி வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மோசடி செய்ததன் காரணமாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரும் தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவருமான முரளியிடம் முறையிட்டபோது, மிரட்டும் தொனியில் தங்களிடம் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது” என மிரட்டல் விடுத்த முரளி மீது கடந்த ஆண்டு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் எந்தவித விசாரணையும் இல்லாமல் அந்தப் புகாரை போலீஸார் முடித்து வைத்துவிட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி தங்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தபோதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருமான முரளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மத்திய குற்றப் பிரிவு மீண்டும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

அடுத்தக்கட்டமாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரான முரளிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News