Thursday, April 11, 2024

“சோழர்களை தொடர்ந்து திரைக்கு வரும் பல்லவர்கள்..!” – ‘நந்திவர்மன்’ படம் சொல்லும் ரகசியங்கள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சோழர்கள் பற்றிய கருத்துகளும், விவாதங்களும் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதற்கு காரணம் அச்சு ஊடகத்தில் இருந்த ‘பொன்னியின் செல்வன்’ வெள்ளித்திரையில் திரைப்படமாக உருவெடுத்ததுதான்.

இந்த நிலையில், சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார்கள். ஆம், அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள ‘நந்திவர்மன்’ திரைப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர்களில் முக்கியமானவரான நந்திவர்மன் பற்றிய பெருமைகளையும், ரகசியங்களையும் வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாக நடித்திருக்கிறார். ஆஷா கவுடா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன், 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘நந்திவர்மன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நந்திவர்மன் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருவதால், தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.

இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்திவர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல் துறையினர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அதன் பின்னணி என்ன? என்பதை சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இப்படத்தை பெருமாள் வரதன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு, படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று வெளியாகியிருக்கும் படத்தின் டீசர் பல விவாதங்களையும், கேள்விகளையும் ஏற்படுத்தும் வகையில் உருவாகியிருக்கிறது.

இயக்குநர் பெருமாள் வரதன் பேசுகையில், “நான் செஞ்சி கோட்டைக்கு ஒரு முறை சென்றிருந்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு பெரியவர் அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்கள் பற்றி கூறினார். அதைக் கேட்கவே வியப்பாக இருந்தது.

பிறகு மறுநாள் அதே இடத்திற்கு நான் சென்றேன், அப்போது மற்றொருவர் அதே விஷயங்களை சொன்னார். இப்படி அப்பகுதியில் இருக்கும் பலர் அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து சொன்னார்கள். அப்போது அங்கு யார் ஆட்சி செய்தது என்று விசாரித்ததில், பல்லவ மன்னர்கள்தான் அப்பகுதியை ஆண்டதாக சொன்னார்கள். பிறகுதான் பல்லவர்கள் பற்றியும், அங்கு நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டேன்.

அப்போது ஐந்து பல்லவ மன்னர்களின் பெயர்கள் தெரிய வந்தது, அதில் நந்திவர்மன் முக்கியமானவராக இருந்ததால் அவருடைய பெயரை தலைப்பாக வைத்துவிட்டேன். அது மட்டுமல்ல, செஞ்சிகோட்டையில் நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, இப்போதும் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் யாராலும் செல்ல முடியாது. வழி இருக்கிறது. அது நமக்கும் தெரிகிறது, ஆனால் அங்கு நம்மால் செல்ல முடியாது.

வெறும் அமானுஷ்ய விஷயங்களை மட்டும் சொல்லாமல் பல்லவர்களின் பெருமைகள் பற்றியும் படத்தில் சொல்லியிருக்கிறோம். பாண்டிச்சேரி கடற்கரையில் சில தூண்கள் இருக்கும். அவை செஞ்சி கோட்டையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தூண்களாகும். பல்லவர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன, அவற்றில் அந்த தூண்களும் ஒன்றாகும்.

இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலாத்தளமாக மகாபலிபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை உருவாக்கிய பல்லவர்கள் பற்றியும், அவர்களுடைய பெருமைகள் பற்றியும் இதுவரை சொல்லாத பல தகவல்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

படத்தில் ஐந்து நிமிடங்கள் பல்லவர்களின் வரலாற்றை 2டி அனிமேஷன் மூலம் சொல்கிறோம். அதைத் தொடர்ந்து தொல்லியல் துறையினர் ஒரு கிராமத்தில் நந்திவர்மன் வாழ்ந்த இடத்தை தேடி செல்கிறார்கள். அப்போது அவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களில் பல்லவர்கள் பற்றிய பல ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பை செஞ்சி கோட்டையில்தான் நடத்தினோம். அமானுஷ்ய விஷயங்கள் நடக்கும் அந்த இடத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்தவில்லை. அதற்கு பதிலாக செங்கல்பட்டு பகுதியில் அந்தக் காட்சிகளை படமாக்கினோம்.

பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்து இந்தப் படத்தை நான் எடுக்கவில்லை. ’பொன்னியின் செல்வன்’ படம் பற்றிய முதல் அறிவிப்பு வெளியாகும் முன்பேயே இந்தப் படத்தின் முழு திரைக்கதையை எழுதி முடித்து விட்டேன். சில மாதங்களாக தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருந்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் பொன்னியின் செல்வன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது. எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு முன்பாகவே என் படம் உருவாக வேண்டியது. தயாரிப்பாளர் கிடைக்காததால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

இதுவரை எந்த ஒரு படத்திலும் சொல்லப்படாத சம்பவங்கள் நிறைந்த படமாகவும், பல்லவர்கள் பற்றி தெரிந்து கொள்ள கூடிய தகவல்கள் அடங்கிய படமாகவும் இந்த ‘நந்திவர்மன்’ படம் இருக்கும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News