நடிகரும், இயக்குநருமான கரு.பழனியப்பன் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
2003-ம் ஆண்டு ‘பார்த்திபன் கனவு’ என்கிற வித்தியாசமான படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராகக் காலடி எடுத்து வைத்தார் கரு.பழனியப்பன்.
‘பார்த்திபன் கனவு’க்குப் பின்னர் ’சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ’மந்திரப் புன்னகை’, ’சதுரங்கம்’, ’ஜன்னல் ஓரம்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.
அவர் இயக்கிய படங்களில் ஆகச் சிறப்பான படமான ‘சதுரங்கம்’ தயாரிப்பாளரின் நிதிப் பிரச்சனை மற்றும் அப்படத்தின் ஹீரோவான ஸ்ரீகாந்தின் ஒத்துழைப்பின்மையில் சில வருடங்கள் தாமதாக வந்து வெற்றி பெறாமல் போனது.
‘மந்திரப் புன்னகை’ படத்தில் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடித்ததை அடுத்து புதுமுக இயக்குநரான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் ‘கள்ளன்’படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் ஓரிரு வாரங்களில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் தற்போது 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கரு.பழனியப்பன். இந்தப் புதிய படத்திற்கு ‘ஆண்டவர்’ என்று பெயர் சூட்டியுள்ளார்.
இந்தப் படத்தைத் தயாரிக்கும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ளார்.
படத்திற்கு இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – வேல்ராஜ், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – ராஜீவன் ஆகிய தொழில் நுட்பக் கலைஞர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாயகன், நாயகி மற்ற நடிகர்கள் டெக்னீஷியன்கள் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.