Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“இறைவன் மிகப் பெரியவன்…” – இயக்குநர் அமீரின் புதிய திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் இறைவன் மிகப் பெரியவன்’.

JSM Pictures சார்பில் தயாரிப்பாளர் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் கதாசிரியர் தங்கம் இணைந்து எழுதும் கதையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குநர் அமீர் பேசும்போது, “இது என்னுடைய விழா. பொதுவாக ஒரு படத்திற்கு வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் அறிமுக விழா.

ஒரு புதிய தயாரிப்பாளர் இந்தக் காலத்தில் படம் தயாரிக்க முன் வருவதே கடினம். அதிலும் என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். இதனால் தயாரிப்பாளருக்காகத்தான் அவரை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த விழா நடத்தப்படுகிறது.

பாரதிராஜா சார் படம் செய்யும்போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார். ஆனால், நாம் எல்லோரும் அது அவருடைய கதை என நினைப்போம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் அதை ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்றலாம் என நானே துவக்கியதுதான் இது.

நானும் வெற்றியும் சேர்ந்து தினமும் ஒரு புராஜக்ட் பற்றி பேசிக் கொண்டே இருப்போம். நான் வேறு படங்கள் செய்யும் நிலையிலிருந்தபோது, இந்தப் படத்தை இந்தக் கதையை செய்யலாம் என தோன்றியது.

நான் வெற்றியிடம் ‘இறைவன் மிகப் பெரியவன்’ கதையைப் படமாக்கலாமா என கேட்டேன். “கண்டிப்பாக செய்யலாம்…” என்றார். இடையில் நான் இன்னொரு படமும் செய்திருக்கிறேன். அதைப் பற்றி அறிவிப்பு விரைவில் வரும்.

இப்படத்தை பொறுத்தவரை படத்தில் கரு.பழனியப்பன் நடிக்கிறார். இப்போதைக்கு இது மட்டும் தான் முடிவாகியுள்ளது. எனக்கு இப்படி சுதந்திரமாக வேலை செய்வதுதான் பிடிக்கும். வெற்றி முதலில் சொன்னபோதே இதை நாம் செய்திருக்கலாமே என்று தோன்றியது.

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களைத்தான் முன்னிறுத்துகிறார்கள்,  இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விசயமாக இருக்கிறது. அதற்காகத்தான் இந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என தோன்றியது.

இந்தப் படம் எங்களுக்குள் இருக்கும் அழகான உறவைத்தான் சொல்ல வருகிறது. நீங்கள் பார்க்காத புதிய விசயம் எதையும் சொல்லப் போவதில்லை. நீங்கள் பார்த்த விசயங்களை, நினைவுகளைத்தான் இந்தப் படம் சொல்லும்.

மேலும் சூரியை வைத்து ஒரு படம் செய்யவுள்ளேன். இன்னும் அடுத்தடுத்து நிறைய படங்கள் செய்யவுள்ளேன். இனிமேல் சினிமாவில் என்னை முழுதாக பார்க்கலாம். ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாக சொல்லும்..” என்றார்.

திரைக்கதை ஆசிரியர் தங்கம் பேசும்போது, “கவிஞர் பிரமிள் எழுதிய மெய் இயற் கவிதையின் மானுடம் சார்ந்த பார்வைதான் இந்த இறைவன் மிகப் பெரியவன்’ படம். இந்த பார்வை முதலில் வெற்றி மாறன் இடத்திலிருந்து ஆரம்பித்தது. மானுடம் சார்ந்த பிரமிளின் பார்வையைத்தான் அமீர் திரையில் கொண்டு வரவுள்ளார்.

உலகம் சார்ந்த பார்வை வெற்றி மாறன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் வந்து சேர்ந்தபோதே இருந்தது. அவருக்கு இயல்பிலேயெ சாதி மதத்தின் மீது பற்று கிடையாது. தன்னியல்பாகவே அவரிடம் மானுடம் இருந்தது. கலைஞனாக இருக்கும் அத்தனை பேருக்கும் இன்றைய தேவையாக இது இருக்கிறது. அந்தத் தேவையை மானுடப் பார்வையை இந்தப் படம் சொல்லும்.

இந்தப் படத்தை முதலில் வெற்றி மாறன் இயக்குவதாக இருந்தது. ஆனால், கோவிட் வந்ததால் நின்றுவிட்டது. பின்னர் இதனை எடுக்கலாமா என ஆரம்பித்தபோது இந்தப் படத்தை அமீர் எடுத்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தோம். இப்போது இந்தப் படம் அதுபோலவே நடப்பதில் மகிழ்ச்சி.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “கவிஞர் பிரமிள் எழுதிய ஒரு வரி இந்தக் கதைக்கு போதுமானதாக இருந்துள்ளது. எழுத்தாளர்கள் கொண்டாடும் எழுத்தாளராக, கவிஞராக பிரமிள் இருந்தார்.

சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராப் பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது’ எனும் பிரமிளின் வரி மட்டும்தான் நமக்கு புரியும். மற்ற கவிதைகள் புரியாது.

இந்தப் படத்தை எடுப்பதாக சொன்னபோது அமீர்தான் இதற்கு பொருத்தமானவர் என தோன்றியது. நான் ஒரு பக்கம் ஆண்டவர்’ என படமெடுக்கிறேன். நீங்கள் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என எடுக்கிறீர்கள்,  இரண்டுக்கும் யுவன் சங்கர் ராஜா இசை என்றால் எல்லோரும் நம்மை பற்றித்தான் பேசுவார்கள்..” என்றேன். “இருக்கட்டும்…” என்றார் அமீர்.

இறைவன் பொதுவானவனா என தெரியாது. ஆனால் மனிதன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை ஒரு கலைஞன் சொல்ல வேண்டிய காலம் இது, அதை இந்தப் படம் செய்யும்.

இந்தப் படத்தின் டைட்டிலேயே “ஏன் அமீரின் இறைவன் மிகப் பெரியவன்’ என்று சொல்கிறீர்கள்..?” என  பிரச்சனை செய்வார்கள். இந்தக் காலத்தில் எதையுமே தவறாக புரிந்து கொள்ளும் பழக்கம்தான் அதிகம் இருக்கிறது. வெற்றி மாறனைவிட இப்படத்தை அமீர் செய்வதுதான் சரி.

எங்களை போல் இசை பற்றி அதிகம் தெரியாதவர்கள் படத்தில் யுவன் அழகான இசை தர காரணம் நம்பிக்கையும் புரிதலும்தான். படமெடுக்க முடிவெடுத்து விட்டால் இயக்குநரை நம்ப வேண்டும். அமீரை நம்புங்கள். படம் கண்டிப்பாக நன்றாக வரும்.

எந்த ஒரு வேலையை செய்தாலும் நேர்மையாக, ஒழுங்காக, தனித்தன்மையுடன் வேலை செய்ய வேண்டுமென நினைப்பவர் அமீர். இந்த விழாவைப் போலவே அமீரின் குழு உற்சாகத்துடன் இயங்கும். இந்த இறைவன் மிகப் பெரியவன்’ படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” என்றார். 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “இந்தப் படத்தின் கதை எனக்கு தெரியாது. நேற்றுதான் அமீர் வந்து “நாளைக்கு துவக்க விழா இருக்கிறது. வந்து விடுங்கள்…” என்றார். அவர் மீது  எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கரு.பழனியப்பன் சொன்னது போல் அமீர்  மீது நம்பிக்கை வைத்ததால்தான்  இங்கு வந்தேன். அமீர் மீது எப்போதுமே எனக்கு நம்பிக்கை உள்ளது.  இந்தப் படம் நன்றாக வரும்…” என்றார்.

இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது, “ரொம்ப நாள் முன்னாடி தங்கம் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். அதற்கப்புறம் ரெண்டு பேரும் வெவ்வேறு வேலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அப்புறம் ஒரு சமயத்தில் இந்தக் கதையை எடுக்கலாம் என தோன்றியது.

வழக்கமாக நான் திரைக்கதையை எழுதவே மாட்டேன். ஆனால் இந்தப் படத்திற்கு திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன், ஆனால் அப்போது செய்ய முடியவில்லை. கதை எழுதும்போதே அமீரிடம் விவாதிப்பேன். கதையில் நான் சில மாற்றங்களை இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றினேன். 

நான் எடுக்கவில்லை என்ற நிலை வந்தபோது அமீர் “நான் எடுக்கவா..?” என்றார். அவர் எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எனக்குள் தோன்றியது. அவர் திரைக்கதையில் சில மாற்றங்களை அவர் வாழ்வியலில் இருந்து எடுத்து வந்துள்ளார். இன்றைய காலகட்ட பிரச்சனையை  சரியான விசயங்களை சொல்ல வேண்டும் என்பதுதான் நாங்கள் இணைந்து வேலை செய்ய காரணம்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News