Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

“ரெடி என்று யார் சொல்வது..?” – ‘கோழி கூவுது’ படப்பிடிப்பில் நடந்த மோதல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமா படப்பிடிப்பின்போது நடிகர்கள் நடிக்கத் துவங்குவதற்கு முன்பாக ‘ரெடி.. ரெடி..’ என்று அனைத்துப் பகுதிகளில் இருந்தும் குரல் வரும். கடைசியாக இயக்குநரும் ‘ரெடி’ என்று குரல் கொடுத்துவிட்டு ‘ஆக்சன்’ என்று சொன்ன பின்புதான் நடிகர்கள் நடிக்கத் துவங்குவார்கள். இதுதான் மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் இருந்து சின்ன பட்ஜெட் படம்வரையிலும் நடக்கும்.

ஆனால் இந்த ‘ரெடி.. ரெடி..’ என்ற வார்த்தையை யார் கடைசியாக சொல்வது என்பதில் ஒளிப்பதிவாளருக்கும், வசனகர்த்தாவுக்கும் இடையில் பெரும் பிரச்சினையே வந்திருக்கிறது.

இந்த சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மதுரை தங்கம்.

“சங்கிலி’ படத்திற்கு அடுத்து நடிகர் பிரபு நடித்த 2-வது திரைப்படம் ‘கோழி கூவுது’. இது ‘இசை ஞானி’ இளையராஜாவின் சொந்தப் படம். இளையராஜாவே என்னை இந்தப் படத்தில் கதை இலாகாவில் வேலை பார்க்கச் சொன்னார். அது முடிந்து படப்பிடிப்புக்குக் கிளம்பும்போது இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் வந்து என்னை படத்துக்கு வசனம் எழுத வரும்படி அழைத்துச் சென்றார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் படத்தின் வசனகர்த்தா நான்தான் என்பதால் நடிகர், நடிகையருக்கு டயலாக்குகளையும் நான்தான் சொல்லிக் கொடுப்பேன். அப்போது ஒரு காட்சியில் சுரேஷுக்கு உடல் நிலை சரியில்லாமல் படுத்திருப்பார். அவருக்கு விஜி மிளகு ரசம் வைத்துக் கொண்டு வந்து கொடுப்பார்.

இந்தக் காட்சியை அவர்களுக்கு விளக்கிவிட்டு.. வசனங்களையும் சொல்லிக் கொடுத்துவிட்டு கடைசியாக ‘ஸார்.. ரெடி ஸார்..’ என்று சொல்லிவிட்டு நான் விலகினேன். அப்போது அந்தப் படத்தின் கேமிராமேனான நிவாஸ் என்னிடம், “நீங்க எப்படி ரெடி சொல்லலாம்.. அதை இயக்குநர்தானே சொல்லணும்..?” என்றார்.

உடனேயே எனக்கும் அது தவறாகப்பட்டது. “ஓகே ஸார். நான் இனிமேல் சொல்ல மாட்டேன்…” என்றேன். அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது டேக்குகளின் இடையே நிவாஸே ஓரிடத்தில் “ரெடி.. ரெடி..” என்றார். அப்போது எனக்குள் திடீரென்று கோபம் வந்தது.

இயக்குநர் சொல்ல வேண்டிய ‘ரெடி’ என்கிற வார்த்தையை இவர் ஏன் சொல்கிறார் என்று கோபப்பட்டு விஜியை வெளியே வரச் சொன்னேன். விஜியும் வெளியே வந்துவிட்டார். உடனே நிவாஸிடம்.. “இப்பத்தான் என்னை ‘ரெடி’ன்னு சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க. இப்போ நீங்க ஏன் அதைச் சொல்றீங்க. நீங்க இயக்குநர் இல்லையே..?” என்றேன்.

நிவாஸ் அதிர்ச்சியாகிவிட்டார். உடனேயே விலகிச் சென்றுவிட்டார். எங்களுடைய மோதலையடுத்து இயக்குநர் கங்கை அமரன் அவரிடமும், என்னிடமும் நீண்ட நேரம் சமாதானம் செய்து வைத்து திரும்பவும் ஷூட்டிங்கை துவக்கினார்.

நான் அடிப்படையில் பத்திரிகையாளன் என்பதால் இது மாதிரியான உணர்வுகளை என்னால் மறைக்க முடியவில்லை. தவறுகளை தவறுதான் என்று அடித்துச் சொல்வேன்..” என்று சொல்லியிருக்கிறார் மதுரை தங்கம்.

- Advertisement -

Read more

Local News