தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், சினிமாவைப் போல் மோதும் கார் பந்தயங்களிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அவரது அணி 3-வது இடத்தை பிடித்து புகழ்பெற்றது. அதேபோல், இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்திலும் அஜித் குமார் பங்கேற்ற அணி 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியது.

இதையடுத்து, தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் அவர் அளித்த பேட்டியில், தனது ரோல்மாடல் மறைந்த பார்முலா 1 பந்தய வீரர் அயர்டன் சென்னா எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது அஜித் குமார், அயர்டன் சென்னாவை நினைவுகூரும் வகையில் பல கோடி மதிப்புள்ள ஒரு ரேஸ் காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார், இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்லாரன் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அயர்டன் சென்னா நினைவாக தயாரித்த ஸ்பெஷல் எடிஷன் ரேஸ் காராகும். இந்தக் காரின் மதிப்பு சுமார் ரூ.10 கோடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கார் பந்தயங்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ள அஜித் குமார், சென்னாவின் திறமை மற்றும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு இந்த காரை வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.