வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் இருவரும் இணைந்துத் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘அடங்காமை’.
இந்தப் படத்தில் இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – P.G.வெற்றி, பாடல் இசை – கியூரன் மென்டிசன். திரை இசை M.S.ஸ்ரீகாந்த், படத் தொகுப்பு – துரைராஜ், பாடல்கள் – ஏ.ரமானிந்தன், கெறால்ட் மென்டிசன், நடன இயக்கம் – சீதாபதிராம். சண்டை இயக்கம் – முரளி, வசனம் – ஏ.பி.சிவா.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக ‘மங்களாபுரம்’ என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம்.
தற்போது இந்த ’அடங்காமை‘ திரைப்படம் இறுதிக் கட்ட வேலைகளுடன் வேகமாக வளர்ந்து வருகிறது.
‘அடக்கமாக இருத்தல்’ இப்போதைய கொரோனா காலத்தில் மிகவும் வலியுறுத்தப்படும் ஒன்றாகும். அதனால்தான், ‘இப்போது வீடு அடங்காமையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம்’ என்று எச்சரித்து ஊரடங்கு போட்டு அரசாங்கமே பிரச்சாரம் செய்கிறது.
இந்த ‘அடங்காமை’யை எச்சரித்து கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு மோஷன் போஸ்டரை இந்த ‘அடங்காமை’ படக் குழுவினர் இன்றைக்கு வெளியிட்டுள்ளார்கள்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2021/04/adangaamai-movie-poster-SAC-1.jpg)
இந்த ‘அடங்காமை’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்று வெளியிட்டார்.
அதில், கைகள் தொடுதல் மூலம் நோய் வரும் அபாயத்தைக் கூறி “நிலைமை அறிவோம்; மடமை தவிர்ப்போம்; அரசின் அறிவுரை ஏற்போம்” என்று எச்சரித்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.
இந்தப் போஸ்டரை வெளியிட்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ”வழக்கமாகப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படத்தின் டைட்டிலை மட்டும் மோஷன் போஸ்டராக வெளியிடுவார்கள். ஆனால், இந்தப் படக் குழுவினரோ, படத்தின் பெயருடன் கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மோஷன் போஸ்டரை உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்போது மக்களுக்குத் தேவை விழிப்புணர்வுதான். இந்த போஸ்டரை வெளியிட்டதன் மூலம் நானும் அந்த விழிப்புணர்வுப் பணியில் பங்கு எடுத்துக் கொள்கிறேன்..“ என்று கூறிப் படக் குழுவினரை பெரிதும் வாழ்த்தினார்.