Saturday, July 27, 2024

“நடிகர்கள் கேரவன் வேனில் சீ்ட்டு விளையாடுகிறார்கள்” – தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“தமிழ் சினிமாவில் கேரவன் வேன்களால் தயாரிப்பாளர்களுக்கு நிறைய செலவுகள் ஏற்படுகிறது. நடிகர், நடிகைகள் இதை உணர்ந்து கொள்வதேயில்லை..” என்று நடிகரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த ‘முதல் மனிதன்’ பட விழாவில் பேசும்போது கே.ராஜன் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “துணிச்சலோடு இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் உசேன், அற்புதமான கதையை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் ராஜராஜதுரை, அருமையான பாடல்கள் தந்த தாஜ்நூர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவு மிக அழகாக இருந்தது. இது ஒரு நல்ல படம் மட்டுல்ல மக்களுக்கு நல்ல பாடமாக இருக்கும் ஒரு படமாகும். இந்தப் படம் பெரும் வெற்றி பெற வேண்டும். இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபம் பெற்று தர வேண்டும்.

எனக்கு தெரிந்து தமிழகத்தில் எங்குமே ஜாதி இல்லை. தாழ்த்தப்பட்டவர்களை வணங்கும் நிலை இன்று வந்துவிட்டது. இன்று அனைவரையுமே நாம் வணங்குகிறோம். அந்த நிலைதான் இப்போது இருக்கிறது.

இப்போது படம் எடுத்தால் 12 கேரவன்கள் தேவைப்படுகிறது. நடிகை நயன்தாரா ஷூட்டிங்கிற்கு வந்தால் அவருடன் 7 அஸிஸ்டெண்ட்டுகள் வருகிறார்கள். இவர்கள், அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளத்தைத் தயாரிப்பாளர் தர வேண்டும். ஆண்ட்ரியா தமிழ் நடிகைதான். ஆனால் அவரோ மும்பையில் இருந்துதான் மேக்கப் மேன் வேண்டும் என்கிறார்.

இப்படி இருந்தால் தமிழ்த் தயாரிப்பாளர் எப்படி பிழைப்பான்..? நடிகர்கள் இன்று கேரவனில் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி படப்பிடிப்பிற்கு வந்தால் ஸ்பாட்டிலேயே இருக்கிறார். மம்முட்டி சொந்த கேரவன் வைத்திருக்கிறார். அவர்கள்  தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதில்லை,

மற்ற ஹீரோக்களையெல்லாம் என்னவென்று சொல்வது. சிலர் அக்கிரமம் செய்வதை நான் எடுத்து சொல்கிறேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.

தற்போது சினிமா துறை நன்றாகத்தான் இருக்கிறது.. மக்களும் தியேட்டருக்கு வருவதற்கு ஆவலாகத்தான் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று ‘டாக்டர்’ திரைப்படம்தான்.  அது தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  ஆனால் படத்தின் பட்ஜெட் 40 கோடி, 60 கோடி என்றாகி, சிவகார்த்திகேயன் அதற்கு பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்.  அதற்கு யார் காராணம்..?

திரிஷா தான் நடித்த படத்திற்கு விழாவிற்கு வரவே 15 லட்சம் கேட்கிறார். தான் நடித்த படத்தின் ஆடியோ நிகழ்ச்சிக்கே வர மாட்டேன் என்று சில நடிகைகள் சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

Read more

Local News