Saturday, April 13, 2024

“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தக் கொரோனோ வைரஸினால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் ஏகத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் துறை.

கடந்த 6 மாத காலமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் 500 கோடிக்கும் மேலான பணம் தமிழ்ச் சினிமாவில் முடக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இந்த வாரத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த நேரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத் தொகையைக் குறைத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“நடிகர்களுக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள்..

என் இனிய சொந்தங்களே… 

வணக்கம்…

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து,  பரிசோதனைகள் செய்து கொண்டு பணி செய்யுங்கள்.

திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.

கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்கு கொண்டு வரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.

அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மனம் வைக்க வேண்டும். ஏற்கெனவே பிறரிடம் கடன் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம்… இதெல்லாம் தயாரிப்பாளர்களின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ் சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது இப்போதே உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்தக் கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.

அவர்களைப் பாராட்டும் இந்தத் தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்  நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா..?

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் அனைத்து நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் தாமே முன் வந்து தங்களின் சம்பளங்களில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக் கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.  இதேபோல், இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா…?

எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் 10 இலட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.

இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களை பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், தற்போது முடிவடைய வேண்டிய நிலையில் உள்ள படங்களுக்கு உங்களது பங்களிப்பாக, 30 சதவிகித சம்பளத்தை விட்டுக் கொடுத்து தமிழ்ச் சினிமா உலகம் மீண்டெழ உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.

தமிழ்த் திரையுலகம் மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழ வைப்போம்...”

பாசத்துடன்,

பாரதிராஜா

தலைவர்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

- Advertisement -

Read more

Local News