Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“டேய்’ போட்டுக் கூப்பிட தயங்கியபோது உற்சாகப்படுத்திய ரஜினி” – சொல்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ராஜாதிராஜா’ படத்தில் நடித்தபோது ரஜினியை ‘டேய்’ என்று அழைக்க வேண்டி வந்தபோது தான் தயங்கி நின்றதாகவும், ரஜினியே ‘பரவாயில்லை பேசுங்க.. இது சினிமாதானே…’ என்று சொல்லி தன்னை ஊக்குவித்ததாகவும் சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது நடிகர் ஆனந்த்ராஜ் இதைச் சொல்லியிருக்கிறார்.

ஆனந்த்ராஜ் இது பற்றிப் பேசும்போது, “எனக்கு சின்ன வயசுல இருந்தே ரஜினி ஸாரை ரொம்பவும் புடிக்கும். நான் சின்ன வயசுல ‘காயத்ரி’ படம் பார்த்தேன். அதுல ஒரு கொடூரமான கணவன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். அதுக்கப்புறம் ரஜினி ஸாரோட கேரியர் எங்கயோ போய் அன்னிக்கு சூப்பர் ஸ்டாராகவே ஆயிட்டார்.

அப்பத்தான் யோசிச்சேன். இப்படியொரு கெட்டவனா நடிச்சவரே பெரிய ஸ்டார் ஆயிட்டார்ன்னா நாமளும் எந்தக் கேரக்டர்ல நடிச்சாலும் தப்பில்லை என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

நானும் ரஜினி ஸார் கூட நடிச்ச முதல் படம் ‘ராஜாதிராஜா’தான். அந்தப் படத்தோட இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜனை எனக்கு முன்னாடியே தெரியும். என்னுடைய நல்ல நண்பர் அவர். இந்தப் படத்துக்கு கேரக்டர் பேசும்போது “ஆனந்த்ராஜ் இதைப் பண்ணட்டும்”ன்னு சொல்லிட்டார்.

அந்தப் படத்துல எனக்கு வைத்த முதல் ஷாட்டே நான் ரஜினி ஸாரை ‘டேய் சின்ராசு’ன்னு கூப்பிடுறதுதான். அதைக் கேட்டுட்டு ரஜினி அங்கேயிருந்து ஓடி வந்து.. “அண்ணே.. சொல்லுங்கண்ணே”ன்னு சொல்லணும். இதுதான் ஷாட்.

சுந்தர்ராஜன் ஸார் இதைச் சொன்னதும் எனக்கு திக்குன்னு ஆயிருச்சு. “ஸார்.. அவர் பெரிய ஸ்டார். சூப்பர் ஸ்டார் வேற. என்னோட முதல் ஷாட்டையே இப்படி வைச்சால் எப்படி ஸார்..? அவரோட ரசிகர்கள் கல்லால அடிப்பாங்க ஸார்..” என்றேன். சுந்தர்ராஜனோ.. “இதுதான் சீன்.. அதுதான் டயலாக்.. ச்சும்மா பேசுங்க” என்றார்.

நான் தயக்கத்துடன் நிற்பதையும், இயக்குநருடன் பேசுவதையும் கவனித்த ரஜினி பக்கத்தில் வந்து “ச்சும்மா கூப்பிடுங்க.. ஒண்ணும் தப்பில்லை. சினிமாவுக்காகத்தானே.. ஜாலியா கூப்பிடுங்க..” என்று சொன்னார். அந்த டயலாக் பேசி முடிப்பதற்குள் எனக்கு வியர்த்துவிட்டது.. இது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் எனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அனுபவம்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

- Advertisement -

Read more

Local News