தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்திற்கான கட்டடம் கட்டப்பட்ட பிறகே திருமணம் செய்வேன் என ஏற்கனவே அறிவித்திருந்த அவர், தற்போது கட்டட பணிகள் முழு வீச்சில் நடைபெறும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவை வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “திரைப்படத் துறையை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுவது போலவே, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், திரைப்படங்களில் நடிக்க விரும்பும் அனைத்து நடிகர்-நடிகையரும், துணை நடிகர்-நடிகையரும், நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெற்றவர்களாகவே இருக்க வேண்டும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை ஆயுள் உறுப்பினராக சேர, வசூலிக்கப்படும் தொகை மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள உறுப்பினர்களின் மருத்துவம், கல்வி, பிற உதவிகள் மற்றும் ஈமச்சடங்கு செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுவரை சங்கம் குறித்து விழிப்புணர்வில்லாமல் நடித்து வந்தவர்கள், அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, வருகிற 20ஆம் தேதிக்குள் உறுப்பினர் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நடிகர்-நடிகையரின் மேலாளர்கள் மற்றும் தயாரிப்பு நிர்வாகிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.