எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்துக்கொண்டிருந்த நேரம். இருவரது படத்திலும் நடிப்பார் தேங்காய் சீனிவாசன். அப்போது அவர், சிவாஜி கணேசனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர் ராமாவரம் தோட்டத்தில் இருந்தபோது அவரை பார்க்க வந்திருந்தார் தேங்காய் சீனிவாசன்.
அப்போது, “சிவாஜியை வைத்து எடுத்த திரைப்படம் தோல்வி அடைந்துவிட்டது. எனக்கு 13 லட்ச ரூபாய் நஷ்டம்!” என்றவர், சிவாஜியை குறித்து மிக மோசமாக திட்டியிருக்கிறார்.

இதை கேட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், “என் முன்னே நிற்காதே, வெளியிலே போ” என தேங்காய் சீனிவாசனை விரட்டிவிட்டார்.
தனது கஷ்டத்தில் எம்.ஜி.ஆர் பங்குகொள்வார் என்று நினைத்ததால்தான் இப்படி விரட்டிவிட்டாரே என வருத்தத்துடன் தனது வீட்டுக்குச் சென்றார் தேங்காய் சீனிவாசன்.
சிறிது நேரத்தில் அவரது வீட்டுக்கு ஒரு கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர், தே.சீனிவாசன் கையில் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு ‘எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
பெட்டியைத் திறந்தால் பணக்கட்டு…. மொத்தம் ரூ.13 லட்சம் இருந்திருக்கிறது.
தனது சொந்த சகோதரரை போல் நினைக்கும் சிவாஜி கணேசனை தேங்காய் சீனிவாசன் திட்டியது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை. அதே நேரம், தேங்காய் சீனிவாசனுக்கும் உதவ நினைத்திருக்கிறார்.
அவர்தான் எத்தனை பெரிய மனிதர்! இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் ராஜு தனது வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.