Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

நடிகர் விவேக் இயக்குவதாக இருந்த கதை நிச்சயமாக தயாரிக்கப்படும் – தயாரிப்பாளர் உறுதி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று கடும் மாரடைப்பால் காலமான தமிழ்த் திரைப்பட நடிகரான விவேக் தனது கடைசிக் காலத்தில் ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

நடிகர் விவேக் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும், சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆனால் இயக்குநராக ஆனதில்லை. அந்தக் குறையைப் போக்கியாக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற வருடமே தான் ஒரு படத்தை இயக்க வேண்டு்ம் என்ற வேலையில் தீவிரமானார் விவேக்.

கொரோனா முதல் அலையின் ஊரடங்குக் காலக்கட்டத்தில் தீவிரமாக யோசித்து தனக்காக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் விவேக். இந்தக் கதையை வைத்து தனக்கு இயக்குநராகும் வாய்ப்பை யார் தருவார்கள் என்று யோசித்து விவேக் அணுகியது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை.

விவேக்கை உடனடியாக வரச் சொல்லிக் கதையைக் கேட்டிருக்கிறார் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டி.ஜி.தியாகராஜன். கதை அவருக்குப் பிடித்துப் போனதால் “நிச்சயமாக இந்தப் படத்தை உங்களுக்காக நாங்கள் தயாரிக்கிறோம்…” என்று வாக்குறுதி அளித்திருக்கிறார் சத்யஜோதி தியாகராஜன்.

இந்த இயக்குநர் வாய்ப்பு உறுதியானதையடுத்து மிகவும் சந்தோஷத்தில் இருந்த விவேக் அடுத்து படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

முதல் ஆளாக நடிகை இந்துஜாவிடம் இந்தப் படம் பற்றிச் சொல்லி “நான் முதன்முதலாக இயக்கவிருக்கும் படம். இந்தப் படத்தில் நீ ஒரு கேரக்டரில் நடிக்கணும். நாளை மறுநாள் கதை சொல்ல வருகிறேன்…” என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், அடுத்த நாளே எதிர்பாராதவிதமாக காலமாகிவிட்டார்.

இந்தத் திடீர் இழப்பினால் சத்யஜோதி பிலிம்ஸும் கண்ணீரில் மூழ்கியது. அதன் விவேக்கை இயக்குநராக்கிய முதல் பெருமை தங்களது நிறுவனத்திற்குக் கிடைக்குமே என்கிற சந்தோஷத்தில் இருந்த தயாரிப்பாளரான சத்யஜோதி தியாகராஜன், இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர்விட்டார்.

இப்போது விவேக் சொன்ன அதே கதையை வைத்து வேறொரு இயக்குநரின் இயக்கத்தில் படத்தை உருவாக்க முடிவெடுத்துவிட்டாராம் தியாகராஜன். காரணம், விவேக் சொன்ன கதையும், அவர் எழுதி வைத்திருந்த திரைக்கதையும்தானாம்.

“அப்படியொரு கதை அது. அதற்கு வித்தியாசமான  திரைக்கதையை எழுதியிருக்கிறார் விவேக். விறுவிறுப்பாக காட்சிகளையும் என்னிடத்தில் விவரித்தார் விவேக். இந்தப் படத்தைத் தயாரித்து அளிப்பதுதான் விவேக்கிற்கு நான் செய்யும் உண்மையான அஞ்சலி. அதை நிச்சயமாக நான் செய்வேன்..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.

- Advertisement -

Read more

Local News