Friday, April 12, 2024

“பிரபுதேவா, லாரன்ஸ்போல் பெரிய நடிகராக வளர வேண்டும்”-டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் ஆசை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர்  தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குநர் நம்பிக்கை சந்துருவின் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33’.

காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

பிரபல நடன இயக்குநரான சாண்டி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். 

தயாரிப்பு – T. ஜீவிதா கிஷோர் (Bamboo Trees Productions), எழுத்து  & இயக்கம் – நம்பிக்கை சந்துரு, ஒளிப்பதிவு –  சதீஷ் மனோகரன், இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத் தொகுப்பு –  தீபக்  S. துவாரகநாத், VFX  சூப்பர்வைசர்  – அருண், சண்டை இயக்கம்  – ஸ்டன்னர் ஷாம், மிக்சிங் –  ராம்ஜி சோமா, SFX – A. சதீஷ்குமார், மக்கள் தொடர்பு –  சதீஷ் (AIM).

3.33 படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை குவித்த நிலையில், வரும் அக்டோபர் 21 ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. பட வெளியீட்டை ஒட்டி நேற்று படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.  

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பேசும்போது, “இது எனக்கு இரண்டாவது படம். இயக்குநர் சந்துருவுடனான முதல் சந்திப்பே வித்தியாசமாக இருந்தது. என்னிடம் கதை சொல்லும்போதே நடித்து காட்டி சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன் பிறகு சிறிது காலம் அவரை காணவில்லை. ஒரு நாள் திரும்பவும் என்னிடம் வந்து, இந்தப் படத்தை என் அக்கா தயாரிக்கிறார் என்று சொன்னார். இப்படத்தில் இசையில் எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சதீஷ் சூப்பராக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாண்டி மாஸ்டர் இப்படத்திற்கு பிறகு பெரிய இடத்திற்கு செல்வார்…” என்றார்.

நாயகி ஸ்ருதி செல்வம் பேசும்போது, “என்னோட நடிப்பு,  குறும் படம் மற்றும் ஆல்பமில்தான் தொடங்கியது,  ஆரம்பத்தில் ‘நீயெல்லாம் ஏன் நடிக்கிற’ என்றுதான் கேட்டார்கள். அதையெல்லாம் பாஸிட்டிவாக எடுத்து கொண்டுதான், இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன்.

சாண்டி மிகப் பெரிய ஆதரவை தந்தார். நடிக்கும்போது மிக உதவியாக இருந்தார். இயக்குநர் சந்துரு ஸார் என்னிடம் கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது. இந்தப் படத்தை மிக அழகாக எடுத்துள்ளார்…” என்றார்.

நாயகன் சாண்டி பேசும்போது, “இந்த ‘3:33’ படம் நாயகனாக எனது முதல் படம் இது. முதலில் “நான் நடிக்கப் போகிறேன்” என்று சொன்னபோது, நிறைய பேர் “வேண்டாம்” என்றார்கள். “நீங்கள் கோரியோகிராபி மட்டும் செய்யுங்கள்” என்றார்கள். ஆனால், எனக்கு பிரபு மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பதுதான் ஆசை.

இதனால் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு நிறைய பேரிடம் கதை கேட்டேன். ஏதாவது சீரியஸாக பண்ணலாமே என யோசித்துக் கொண்டிருந்தபோது, சந்துரு வந்து “கதை சொல்கிறேன்” என்றார். அவர் கதை சொல்லும்போது, அந்த இடத்தையே ரணகளமாக்கி, நடித்து,  கதை சொன்னார்.

முதலில் இந்தக் கதைக்கு நான் தாங்குவேனா என்று பயந்தேன். ஆனால், “நான்தான் வேணும்” என்றார் சந்துரு. இந்தப்படத்தின் உண்மையான நாயகன் சந்துருதான். இந்தப் படத்தில் சூப்பராக வேலை வாங்கினார். அவர் நடித்து காட்டியதில் 50 சதவீதம்தான் நான் செய்துள்ளேன். அவருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார்.

இந்தப் படத்தை ஒரு வீட்டிற்குள்ளேயே வைத்து அருமையாக எடுத்து விட்டார்கள். தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய லாபத்தை சம்பாதித்து தரும். இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார்…” என்றார்.

இயக்குநர் நம்பிக்கை சந்துரு பேசும்போது, “என் வாழ்க்கையில் இயக்குநராக நிறைய முயற்சி செய்தேன். மூன்று படங்கள் அடுத்தடுத்து டிராப் ஆனது. ஆனால், என் குடும்பம்தான் என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தை எடுக்கலாம் என்றார்கள்.

சொந்த முயற்சி என்னும் போது, யாரை வைத்து செய்யலாம் என யோசித்தபோது, சாண்டி மாஸ்டர் ஞாபகம் வந்தது. அவரிடம் தயக்கத்தோடுதான் போனேன். ஆனால், கட்டியணைத்து கதை கேட்டு பாராட்டினார்.

இசையமைப்பாளரிடம் இது என் வாழ்க்கை. என்னிடம் இப்போது பணம் இல்லை. உதவுங்கள் என்றேன். கதை கேட்டு என்னை பாராட்டி அருமையான இசையை தந்தார். ஒளிப்பதிவாளர் மீது முதலில் நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் வைத்த முதல் ஷாட்டிலேயே பிரமித்துவிட்டேன்.

கௌதம் சார் இப்படத்தில் வந்தது ஒரு ஆக்ஸிடெண்ட்தான். பாரா நார்மல் இன்வெஸ்டிகேட்டராக வருகிறார். அந்த கேரக்டருக்கு மிக பெரிய ஆள் வேண்டும் என்று நினைத்தோம், கௌதம் சாரை அணுகி கதை சொன்னோம். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார், அவரை இயக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு பெரிய இயக்குநர் போல் அவர் எந்த பந்தாவும் இல்லாமல் நடித்து தந்தார். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News