தமிழ்த் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெரும் நிகழ்வாக 100 வி.ஐ.பி.க்கள் இணைந்து ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா.’
5656 புரொடக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இந்த ‘வாஸ்கோடகாமா’ படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி.சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படத்தின் கதாநாயகி, வில்லன் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.
ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன், இசை என்.வி.அருண், சண்டை இயக்கம் – விக்கி, கலை இயக்கம்- ஏழுமலை, படத் தொகுப்பு – தமிழ்க்குமரன், நடன இயக்கம் – சாண்டி.
கதை, திரைக்கதை எழுதி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஆர்.ஜி.கே. எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன்.

இந்த ‘வாஸ்கோடகாமா’ படம் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது, “படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே படத்துக்கு ‘வாஸ்கோடகாமா’ என்கிற இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதுதான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை. குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்..? அவனது மன நிலையும், குணாம்சமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனையாக ஜாலியான காட்சிகளோடு சொல்லும் படம்தான் இந்த ‘வாஸ்கோடகாமா’.
இந்தப் படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்துவதற்காக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 100 பிரபலங்களை வைத்து வெளியிட ஏற்பாடு செய்தோம்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன், ஆர்யா, வெங்கட் பிரபு, பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன், நடிகைகள் அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர், இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார், இசையமைப்பாளர் டி இமான், தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், ஊடகப் பிரபலம் ரங்கராஜ் பாண்டே, மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட நூறு பேர் இன்று 10-ம் தேதி காலை 10 மணி 10 நிமிடத்திற்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இது இதுவரை திரையுலகம் காணாத புதுமையான நிகழ்வாகும்.
வணிக ரீதியிலான அனைத்து அம்சங்களையும் கொண்ட சுவாரஸ்யமான படமாக இது உருவாக இருக்கிறது…” என்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், இதன் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.