Thursday, April 11, 2024

“எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்?” – தயாரிப்பாளர் கேயார் கேள்வி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“பொன்னியின் செல்வன்’ படத்தில் எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்..?” என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரான  கேயார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “பொன்னியின் செல்வன்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி காத்திருந்தது. இந்த வெற்றிக்கு 50 சதவீத காரணம் அமரர் கல்கிதான். அந்தப் புகழ் அவரையே சாரும்.

இந்துக்களுக்கு எப்படி ராமாயணமோ அதுபோல, இனிமேல் தமிழர்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ கதை இருக்க போகிறது. இதற்கு காரணம் அமரர் கல்கியின் எழுத்துகள்தான். அவரது ஐந்தரை ஆண்டு கால உழைப்பு அளப்பரியது. எப்படி இந்த புத்தகத்தை படிக்காமல் போனோம் என்று அனைவருமே தற்போது வருத்தப்படுகிறார்கள்.

எனவே இந்தப் படத்தின் வெற்றியின் பெரும் பங்கு கல்கிக்குத்தான் போய்ச் சேரும். எழுத்தாளர் கல்கி உயிருடன் இருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன் என்று ரஜினிகாந்தே கூறியிருந்தார். இப்போது தமிழ்நாட்டில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்க்கவில்லை என்றாலே அவர்களை பாவம் என்று கூறும் நிலைமை இருக்கிறது.

இந்த படத்தில் அனைத்து சுமைகளையும் டைரக்டர் மணிரத்னமே தாங்கிக் கொண்டு விட்டார். ஆனாலும் மணிரத்னம் மேல் எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், கல்கியின் ஒரு மாபெரும் காவியத்தை அவர் படமாக்கி இருக்கிறார். ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்படவில்லை.

படத்தின் முதல் காட்சியில்கூட கல்கியின் படத்தை காட்டவில்லை. கல்கி படத்துடன் கமல்ஹாசன் குரல் ஒலித்திருந்தால் இன்னும் இந்த படம் சிறப்படைந்திருக்கும். ஆனால், இதை செய்யவில்லை. எனவே 2-ம் பாகத்திலாவது இதனை செய்ய வேண்டும்.

ஏனெனில், இந்தப் படத்துக்கு முக்கிய கதாநாயகனே எழுத்தாளர் கல்கிதான். அவருக்கு நன்றி செலுத்தியிருக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு சன்மானம் வழங்கி கவுரவித்திருக்க வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது. இதை செய்தால்தான் நல்லது.

மணிரத்னத்தின் கனவை நிறைவேற்ற லைகா நிறுவனம் இருந்தது. கல்கியின் கனவை கவுரவப்படுத்துவது மணிரத்னம் உள்பட படக் குழுவினரின் கடமையும் கூட…” என்று சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News