நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரைத்துறையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்தவர் உதயநிதி. அதைத் தொடர்ந்து ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மறுபக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். அண்மையில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றில் தான் நாயகனாக நடிக்கவிருப்பதாக நடிகர் உதயநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார் உதயநிதி. அந்தச் செய்தியில், “15 வருட @RedGiantMovies_ -ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். @RKFI தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட @ikamalhaasan சாருக்கு நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.