Thursday, April 11, 2024

“இந்தப் படம் இளைய தலைமுறையினரை மீண்டும் படிக்க வைத்திருக்கிறது..” – சீயான் விக்ரமின் பாராட்டு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதியம் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் சீயான் விக்ரம் பேசுகையில், ”ஜெயம் ரவி மற்றும் கார்த்தி சொன்ன விசயத்தை நான் வழி மொழிகிறேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு எங்களை நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

பத்திரிகைகளும், ஊடகங்களும் இப்படத்தின் தொடக்கத்திலிருந்து பெரும் பாலமாக இருந்துள்ளீர்கள். வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத வகையில், இந்தப் படத்தின் படத்தைப் பற்றிய விமர்சனத்திற்காக ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதள பக்கத்தையும் பார்வையிட்டேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு புதுவிசயத்தை பதிவிட்டிருந்தார்கள். இது எனக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. ‘பொன்னியின் செல்வன் பிரமிப்பிலிருந்து வெளியே வந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள்’ என்று என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் செல்லமாக கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கி இருந்தேன்.

இந்த நாவலை வாசித்து பல ஆண்டுகளாக அந்த கதாபாத்திரங்களைப் பற்றி தங்களது மனதிற்குள் ஒவ்வொரு வகையில் வரைந்து வைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன்.. என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், ஒரு கற்பனை இருந்திருக்கும். அவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு முகமும் இருந்திருக்கும். அந்த முகங்கள் அனைத்தும் தற்போது எங்களின் முகமாக மாறிவிட்டது.

தற்போது அந்த கதாபாத்திரங்களை பற்றி எண்ணும்போது, எங்களது முகம் உங்களது நினைவிற்கு வருகிறது. இதற்காக படைப்பாளி மணிரத்னத்திற்கு எங்களின் தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர்களான நாங்கள், எத்தனையோ வேடத்தில் தோன்றியிருக்கிறோம். ஆனால் வாசகர்களின் கற்பனையில் நீண்டகாலமாக இருந்த ஒரு முகமாக நாங்கள் மாற்றம் பெற்றிருப்பது என்பது புதிது.

நடிகர்களுக்கு எப்போதும் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதனை இந்தப் படத்தின் மூலம் எளிதாக சென்றடைந்திருக்கிறோம் என எண்ணும்போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சரித்திர கதைகளில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் மீது ரசிகர்கள் காட்டும் அன்பு, இன்று எங்களை வந்தடைந்திருக்கிறது. இதற்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது.

நாற்பது ஆண்டுகளாக திரையரங்கத்திற்கே செல்லாதவர்கள், இந்த படத்திற்காக மீண்டும் திரையரங்கத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள் எனும் போது மகிழ்ச்சி மேலும் இரு மடங்காகிறது.

இந்தப் படத்தை பார்த்த இளைய தலைமுறையினர் பலரும், ‘இந்த படத்தை பார்த்து விட்டோம். இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் மீண்டும் ஒரு முறை  படிக்க வேண்டும்’ என்பார்கள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எல்லோரும் வாசிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்,

இது மிகப் பெரிய விசயம். இதற்கான எல்லாப் புகழும் இயக்குநர் மணிரத்னத்திற்கும், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும்தான் சேரும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News