Friday, April 12, 2024

“சங்கத்தில் சம்பளம் கொடுக்கவே பணமில்லை. இதில் எப்படி ஊழல் செய்ய முடியும்..?” – ஆர்.கே.செல்வமணி கேள்வி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களிடத்தில் வசூலிக்கப்படும் சந்தா தொகை அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கத்தான் போதுமானதாக உள்ளது. இதில் எப்படி ஊழல் செய்ய முடியும்..?” என்று இயக்குநர் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைக்கு டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பேசும்போது செல்வமணி இதைத் தெரிவித்தார்.

அவர் பேசும்போது, “இப்போதெல்லாம் சங்கத்தில் வந்து வேலை செய்யவே பயமாக இருக்கிறது. ராதாரவி அண்ணனை பார்த்துதான் நான் என்னை தேற்றிக் கொள்வேன். ஆனால், இப்போது அதுவே கடினமாக இருக்கிறது.

நாம் பதவிக்கு வந்துவிட்டாலே நாம் மற்றவர்களுக்கு வேலை பார்க்கும் அடிமை போல் நினைத்துக் கொள்கிறார்கள். யார், யாருக்கெல்லாமோ பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது எதுவுமே வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டுக்குப் போகலாம் என்று நினைக்கும்போது, யாராவது “சார்… உங்களால்தான் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன்…” என்று சொல்வார்கள். அதை நினைத்து, திரும்பவும் இந்த இடத்தில் வந்து அமர வேண்டியிருக்கிறது.

எங்கள் சங்கத்தில் வரும் சந்தா தொகை, அலுவலக ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே போதாது. இதில் நான் எப்படி ஊழல் செய்ய முடியும்..? அனைத்து சங்கங்களிலும் இதே நிலைதான் உள்ளது.. நல்லது செய்ய நினைப்பவர்கள் மீது பழிதான் விழுகிறது.

ராதாரவி அண்ணன் நான் உதவி இயக்குநராக இருந்தபோது எனக்கு என்ன மரியாதை தந்தாரோ, இப்போதும் அதே மரியாதையைதான் தருகிறார். நல்ல மனிதர் அவர். இங்கு நல்ல உள்ளங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சிறப்பான பணி செய்து இந்தச் சங்கத்திற்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டும்..” என்றார்.  

- Advertisement -

Read more

Local News