டோரா திரைப்பட இயக்குநர் தாஸ் ராமசாமி பற்றிய நினைவலைகளை அவரது பள்ளி ஆசிரியர் என்.ஹெச்.எஸ்.கவுதமன்
“நான் ஓய்வு பெற்ற பிறகு, சென்னை வந்தேன். அப்போது பாண்டி பஜார் சென்றபோது, திடீரென ஒருவர், வணக்கம் சார் என்றார். பார்த்தால், மன்னை தேசியப்பள்ளியில் என்னிடம் படித்தவர் என்கிற நினைவு வந்தது.
அவர் என்னிடம், ‘என்னுடைய பெயர் முருகதாஸ். பன்னிரண்டாம் வகுப்பில், உயிரியல் வகுப்பில் படித்தேன். அப்போதே சினிமா கனவு இருந்தது. உங்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். ஏதாவது இளங்கலை படிக்க வேண்டும் என்பதற்காக நான்கு ஆண்டுகள் போராடி பட்டம் பெற்றேன். இப்போது உதவி இயக்குநராக இருக்கிறேன்’ என்றார்.
நான், ‘டைரக்டர் A.R.முருகதாஸ் மாதிரி பெரிய ஆளாக ஆகிவிடு’ என்று வாழ்த்தி விடைபெற்றேன்.
அதன் பிறகுதான் முகநூல் கணக்கு துவங்கினேன். பழைய மாணவர்கள் பலரும் அதன் வழியாக தொடர்புகொண்டனர். அதில் இவரும் ஒருவர். திரைப்படத்துக்காக, தாஸ் ராமசாமி என பெயர் வைத்துக்கொண்டதாக கூறினார்.
என்ன படம் இயக்கினீர்கள் என்றேன்.
டோரா என்றார்.
என் மாணவர்தான் இயக்கினார் என்பது தெரியாமல், மிக ரசித்து ஐந்து முறை பார்த்த படம் அது. இதைச் சொல்லியவுடன் தாஸ் ராமசாமிக்கு அத்தனை மகிழ்ச்சி” என தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் இயக்குநர் தாஸ் ராமசாமியின் ஆசிரியர் என்.ஹெச்.எஸ்.கவுதமன்