‘சீயான்’ விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயர் வைத்துள்ளனர். இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளியும் இன்றைக்கு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சமீபத்திய ஆண்டுகளில் தன் தனி முத்திரையை பதித்த முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம்தான் இந்தத் ‘தங்கலான்’.
கோலார் தங்க வயலைக் கதைக் களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும், நீலம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன், நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தமிழ் பிரபா இணை கதாசிரியராக பணியாற்ற, கலை இயக்கத்தை எஸ்.எஸ்.மூர்த்தி கையாள, படத் தொகுப்பு பணிகளை ஆர்.கே.செல்வா கவனிக்க, சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்கிறார்.
‘சீயான்-61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
‘சீயான்’ விக்ரம் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, தீபாவளி விருந்தாக வெளியாகியிருப்பதால் உற்சாகமடைந்த அவர்கள், இதை தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.