மறைந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளருமான சுபீன் கார்க் நடித்த கடைசி திரைப்படமான ராய் ராய் பியன்னாலே சமீபத்தில் வெளியாகியுள்ளது. அசாமி, ஹிந்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் இதுவரை 38,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்ததுடன், அசாம் மக்களின் பெரும் அன்பை பெற்றவர் சுபீன் கார்க்.

அவர் நடித்த கடைசி படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாளிலேயே அசாமிய பாக்ஸ் ஆபிஸில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், அந்தப் படத்திற்கான ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும், அரங்குகள் முழுவதும் ரசிகர்கள் நிரம்பிய காட்சிகளுடன் படம் திரையிடப்படுவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் படத்தில் சுபீன் பார்வையற்றவராக நடித்ததுடன், இசையையும் தாமே அமைத்துள்ளார். திரைப்பட வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, ராய் ராய் பியன்னாலே ரூ.50 கோடி வரை வசூல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் அசாமில் வெற்றி பெற்ற பைமோன் டா, ரகுபதி மற்றும் பிதுர்பாய் போன்ற படங்கள் ரூ.13 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தன.செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும் போது சுபீன் கார்க் உயிரிழந்தார். இருப்பினும் அவரது மரணத்தில் இன்னும் மர்மம் நீடித்து வருவதால், அசாம் அரசு இதுகுறித்து விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

