தமிழில் கே.டி. குஞ்சுமோன் தயாரித்த ‘காதலுக்கு மரணமில்லை’ படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ். அதை தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களிலும் நடித்தார்.
இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை தமிழ் மற்றும் கன்னடம் என, இரு மொழி படமாக தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல்-16-ம் தேதி ரிலீஸாகிறது.
இந்தப் படம் பற்றி நாயகன் தேஜ் கூறும்போது, “நான் தமிழில் ஏற்கெனவே ‘காதலுக்கு மரணம் இல்லை’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். ‘காந்தம்’ என்கிற படத்தையும் ரிலீஸ் செய்தேன்.
தற்போது இந்த நான்கு வருட இடைவெளியில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ‘ரீவைண்ட்’ என்கிற பெயரில் இரு மொழி படம் ஒன்றை தயாரித்துள்ளேன்.
ஒரு பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாஃபியா ஒன்றை எதிர்த்து டெக்னாலஜி உதவியுடன் போராடுவதுதா் இந்தப் படத்தின் கதை. மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை மையமாக கொண்ட சயின்டிஃபிக் ஆக்சன் த்ரில்லராக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம்.இந்த ‘ரீவைண்ட்’ என்ற டைட்டிலைத்தான், சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் கன்னட ரீமேக்கிற்கு டைட்டிலாக அறிவித்தார்கள். ஆனால் அதே டைட்டிலை, நான் ஏற்கனவே பதிவு செய்து, சென்சார் சான்றிதழ் வாங்கி, ரிலீஸ்வரை வந்துவிட்டேன் என்கிற தகவல் தெரிந்ததும், மிக நாகரிகமாக ‘மாநாடு’ படக் குழுவினர் தலைப்பினை விட்டுக் கொடுத்து விலகிவிட்டார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..” என்றார்.