ஒரு சிறியி ஊரில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் ஒருவர், கொடூர முதலமைச்சரை எப்படி சிறைக்கு அனுப்புகிறார் என்பதுதான் கதை.
கான்ஸ்டபிள் சிவாவாக, நாக சைதன்யா நடித்து இருக்கிறார். நிஜயமான போலீஸை கண்முன் நிறுத்துகிறார். தனது காதல் குறித்து தனது தந்தையிடம் அவர் சொல்ல முற்படும் காட்சி படு காமெடி. அதே நேரம், பெரிய பிரச்சினை ஏற்படும் நேரத்தில் அவரது தந்தை உதவ முன்வரும் காட்சி அற்புதம்.
முதலமைச்சர் தாக்ஷாயினியினியாக ப்ரியாமணி நடித்திருக்கிறார். ஆம்புலன்ஸுக்கு வழிவிட தனது கான்வாயை வழிமறித்த கான்ஸ்டபிளை பலரது முன் வாழ்த்திவிட்டு, உயர் அதிகாரியை திட்டும் காட்சியில் மிளிர்கிறார். அதுவும் அவர் செய்யும் கொலைக் காட்சி மிரள வைக்கிறது.
ரவுடி ராஜூவாக அரவிந்த் சாமி, அசத்துகிறார். அதுவும், “நேர்மையான சிபிஐ அதிகாரி.. நேர்மையான போலீஸ்… இப்படி ஒரே பேட் வைப்ரேசனா இருக்கே” என அவர் சொல்லும் காட்சி ரசிக்கவைக்கிறது.
சிபிஐ அதிகாரி ஜார்ஜாக சம்பத் ராஜ் பொறுத்தமான கதாபாத்திரம்.முதல் பாதியில் கான்ஸ்டபிள் சிவா மற்றும் அவரின் உலகத்தை விரிவாக காட்டியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஜாதி வேறுபாட்டால் சிவாவுக்கு ரேவதியை திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. கோட்டாவால் வந்த சிவாவால் சரியாக வேலை செய்ய முடியாது என்று அவரின் உயர் அதிகாரி நினைக்கிறார்.
இரண்டாம் பாதி பரபரப்பாக செல்கிறது. கவுரவத் தோற்றத்தில் வரும் ராம்கி நம்மை கவர்கிறார். ஐஜி நட்ராஜாக வில்லன் வேடத்தில் சரத்குமார் மிரட்டுகிறார்.
காவல் நிலையத்தில் நடக்கும் சண்டை காட்சி, அணைக்கட்டில் நடக்கும் சண்டைக் காட்சி ஆகியவை அதிரவைக்கின்றன.
இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜாவின் இசை, பிஜிஎம் எடுபடவில்லை.
கஸ்டடி படத்தின் கதையை வெங்கட் பிரபு ஏற்கனவே சொல்லிவிட்டார். படம் பார்க்கும்போது அடுத்தது என்னவென்பதை நம்மால் கணிக்க முடிகிறது. சில கதாபாத்திரங்களை கூடுதலாக காட்டியிருக்கலாம் வெங்கட் பிரபு.
ஆனால், கண்டிப்பாக கஸ்டடியை பார்க்கவும்.