இந்திய சினிமாவில் தற்போது மிகவும் பிஸியாக வலம் வரும் நடிகைகளில் முக்கியமானவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் வெளியான தனுஷின் ‘குபேரா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா, இத்திரைப்படம் தற்போது ₹100 கோடியை கடந்தும், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை காலை 10.08 (27/06/2025) மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அறிவிப்பு மிகவும் வித்தியாசமான போஸ்டர் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராஷ்மிகா, ஒரு வாளை கையில் பிடித்து, கடுமையான சிங்கம் போன்ற தோற்றத்துடன், போர்க்க்களத்தை ஒத்த இடத்தில் நின்று காட்சியளிக்கிறார். அவரை சுற்றி பலர் அவரை தாக்கும் விதமாக அமைந்த அதிரடியான காட்சி அந்தப் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநராக வலம் வரும் ரவிந்திரா புல்லே இயக்கி வருகிறார்.
போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ராஷ்மிகா, நாங்கள் செய்திருக்கும் வேலை எப்படி இருக்கிறது என்பதை உங்களுக்குக் காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது! இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு புதிய ராஷ்மிகாவை இந்தப் படத்தில் பார்க்க முடியும். நானும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், என் அடுத்த படத்தின் பெயரை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா? யாராலும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறேன்… ஆனா யாராவது கண்டுபிடிச்சா நிச்சயமாக வந்து சந்திக்கிறேன் என்றுள்ளார்.