Wednesday, April 10, 2024

சட்டத்தையே மாற்றவைத்த மோகன்லால்! நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர், 2012-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது எர்ணாகுளத்தில் உள்ள அவர் வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அதை வருமான வரித்துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக மோகன்லால்,அவருக்கு யானை தந்தங்கள்கொடுத்த திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனை மோகன்லால் சந்தித்தார். இதைத் தொடர்ந்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அவரிடம் மீண்டும் தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதனால் வனத்துறை வழக்கை ரத்து செய்தது.

‘மோகன்லால், தனது செல்வாக்கை வைத்து சட்டத்தைத் திருத்தவைத்து தப்பிவிட்டார்’ என அப்போது பல பத்திரிகைகள் எழுதின.

மேலும், மோகன்லால் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதையும் தந்தம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதையும் எதிர்த்து பவுலோஸ் என்பவர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. யானை தந்தம் வைத்திருப்பதற்கான முறையான அனுமதி தன்னிடம் இருக்கிறது என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனுதாக்கல் செய்தார். விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்லால் உட்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த பெரும்பாவூர் நீதிமன்றம் நவ.3-ம் தேதி அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News