திரையுலகில் எம்.ஜி.ஆர். உச்சத்தில் இருந்த காலகட்டம். அவரது படங்கள் பலவற்றுக்கு கவிஞர் வாலி பாடல் எழுதிக்கொண்டு இருந்தார்.
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்”, “உதயசூரியனின் பார்வையிலே” போன்ற, திரைப்படம் + அரசியல் இணைந்த வரிகளை அளித்தவர் வாலிதான்.
இந்த நிலையில் முரசொலி மாறன் தயாரிக்க எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த “எங்கள் தங்கம்” திரைப்படம் 1970 ஆம் ஆண்டு உருவாகியது.
இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதினார். “தங்கப்பதக்கத்தின் மேலே”, “நான் செத்துப் பொழச்சவன்டா” போன்ற பிரபலமான பாடல்கள் இவர் எழுதியவைதான்.
இப்படி பாடல்களை உருவாக்கிக்கொண்டு இருந்தார்கள் இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி.யும், வாலியும்.
புதிய பாடல் ஒன்றுக்கு மெட்டு ஏற்றபடி,
“நான் அளவோடு ரசிப்பவன்” என்று முதல் வரியை வாலி எழுதிவிட்டார். ஆனால் அடுத்தவரி வரி அந்த மெட்டுக்கு ஏற்ற மாதிரி அமையவில்லை.
பிரசவ வேதனை போல தவித்தார் வாலி.
அப்போது கலைஞர் அங்கே வந்தார், அவரிடம் வாலி விசயத்தைச் சொன்னார்.
முதல்வரி, “நான் அளவோடு ரசிப்பவன்” என்பதை அறிந்த கலைஞர், உடனே, “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்றார்.. மெட்டுக்கு ஏற்றமாதிரி.
வாலிக்கும், எம்.எஸ்.வி.க்கும் பெரும் மகிழ்ச்சி.
பிறகு இந்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர்., “பாடல் அருமை. அதிலும் “அளவின்றி கொடுப்பவன்” என்ற வரி மிகச்சிறப்பு” என்றார்.
உடனே வாலி, “இந்த பாராட்டை கலைஞருக்கு கொடுங்கள். அவர்தான் இந்த வரியை எழுதியது எழுதினார்” என்றார்.
பிறரின் திறமைக்கான அங்கீகரத்தை தான் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற வாலியின் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்?