Thursday, April 11, 2024

மம்மூட்டிக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் கடும் கண்டனம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகரான ஸ்ரீநாத் பாஷி என்பவர் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அதன் பெண் தொகுப்பாளரை அநாகரீகமான வார்த்தைகளில் திட்டினார். இது குறித்து அந்தப் பெண் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஸ்ரீநாத் பாஷி கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதேசமயம் மலையாள திரைப்ட தயாரிப்பாளர் சங்கமும் அவர் மீது புதிய படங்களில் நடிப்பதற்கு தற்காலிக தடை விதித்தது. இந்த சம்பவத்திற்கு முன்னதாக அவர் மீது ஏற்கனவே சில புகார்களும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்ததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணம்.

இந்த நிலையில் ‘ரோர்ஸ் காட்ச்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் மம்மூட்டியிடம், ஸ்ரீநாத் பாஷி மீதான தடை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த மம்முட்டி, “யாராக இருந்தாலும் ஒருவரின் வாழ்வாதாரத்தை பறிக்கும்விதமாக தடை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்” என்று பதிலளித்தார். ஸ்ரீநாத் பாஷி சமீபத்தில் வெளியான பீஷ்ம பர்வம்’ படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பதால் மம்முட்டி அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சு எழுந்தது.

இந்த நிலையில் மம்முட்டியின் இந்தப் பேச்சுக்கு பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ்குமார் கூறும்போது, “தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையில்லாமல் பிரச்சனைகளை கொடுக்கும் நபர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முழு விபரம் என்னவென்று தெரிந்து கொண்டு மற்றவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

மம்முட்டி இது குறித்து விசாரித்துவிட்டு பின் பதில் சொல்கிறேன் என கூறி இருக்கலாம். மோகன்லாலும் மம்முட்டியும்கூட இது போன்ற தயாரிப்பாளர்களின் நடவடிக்கைகளை முடக்கும் விதமாக குரல் கொடுப்பதை கண்டு நாங்கள் பயப்பட போவதில்லை.

நடிகர்களுக்கு மட்டும்தான் வாழ்வாதாரமே இருக்கிறதா..? தயாரிப்பாளர்களுக்கு இல்லையா..? தயாரிப்பாளர்கள்தானே அந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கே ஆதாரம்.. அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டாமா..? யார் ஒருவர் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்து வருகிறார்களோ அவர்கள் மீதுதானே நடவடிக்கை எடுக்கப்படுகிறது..? அப்படிப்பட்ட ஒருவருக்காக எதையும் முழுதாக தெரிந்து கொள்ளாமல் ஆதரவு குரல் கொடுப்பது முறையல்ல…” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News