Saturday, April 13, 2024

“எட்டப்பனாகிவிடாதீர்கள்…” – விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் அறிவுரை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த நாடான தமிழ் ஈழத்தில்கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதையொட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான தாமரை இது குறித்து விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இது :

விஜய் சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…!

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின் வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த அளவுக்கு அது வளரும் முன்பாகவே உங்களை எச்சரித்துவிட வேண்டுமென்றுதான் விரும்பினேன்.

முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்ததுகூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப்பட்டு வந்தது. 

ஆரம்பக் காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளானபோது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத் தலைவர் ”அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்” என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.

முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்ததுகூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக்கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே…

ஐயகோ !

சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று போட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, ‘இந்த நாள் இனிய நாள்’ என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்…. காணாமல் போன தம் வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, ‘நாடகம்’ என்று வர்ணித்தார்.

இனப் படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே??? அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !?

ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும்…?!

வரலாறு பல கதைகள் சொல்லும் வி.சே அவர்களே..! அது தன் பாட்டுக்கு எழுதிப் போகும்…. எட்டப்பன் ஒரேயொரு குட்டி வேலைதான் செய்தான், இன்றளவும் ‘எட்டப்பன்’ என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியுமல்லவா..? உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா…?

நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள். எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள்..!

என்னது… நட்டமென்றா சொன்னேன்..??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன். என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன். என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன். இதில் நட்டமென்ன வந்தது நட்டம்..?? ஒரு தமிழ்ப் பெண் தன் ‘பங்களிப்பாக’ இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல்!..

நாமென்ன போர் முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா?.. போராட்டங்களில் முன் வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா?..

அண்ணனைக் காணோம்.. அக்காவைக் காணோம்.. அம்மாவை சாகக் கொடுத்தோம்.. என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா..?? இசைப் பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா..? இல்லை.. அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தோமா..?

ஒரு பாடலை எழுத மறுக்கிறோம். ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம். அவ்வளவுதானே..? என்ன ‘நட்டம்’..?

நமக்குத் தெரிந்த வகையில் ‘பங்களி’க்கிறோம், அவ்வளவுதானே..??

நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலை நிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும். நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.

தமிழர்களாகப் பிறந்துவிட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம், புறம், அடுப்படி, மூன்று வேளை சோறு..????

தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது..! காலக் கோளாறு இது..!

தமிழன் தாழலாம்.. ஆனால் வீழக் கூடாது…

வீழ்த்த முனைபவர்கள் பல வேடமிட்டு வரத்தான் செய்வார்கள். நாம் ஏமாந்து விடக் கூடாது. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள். நாம் தூங்கிவிடக் கூடாது.

முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்..! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக் கூடாது..!

மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்..

என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம்..! உலகத் தமிழர்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்.

பி.கு.: சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது..! அதை ஏற்று நடியுங்கள். வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் !

தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை! படம் வெளியிட்டிருக்கிறேன். கண்ணாடி முன் நின்று ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்..!

- Advertisement -

Read more

Local News