உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022 மார்ச் 27-ம் தேதி நடக்கிறது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும்.
இதற்காக இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு படம் இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும்.
அதற்காக இந்தாண்டு இயக்குநர் ஷாஜி என்.கருண் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்தியா சார்பாக ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்ல 14 படங்கள் போட்டியிடுகின்றன, அதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ என்ற தமிழ்ப் படமும் உள்ளது. இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ் படமும் இதுதான்.
மேலும், மலையாளப் படமான ‘நாயாட்டு’, வித்யா பாலன் நடித்த ‘ஷெர்னி’ என்ற ஹிந்தி படம், ‘லாஸ்ட் பிலிம் ஷோ’ என்ற குஜராத்தி திரைப்படம், ‘சர்தார் உத்தம்சிங்’ என்ற ஹிந்தி படம், ‘பிரிட்ஜ்’ என்ற அஸ்ஸாம் படம் ஆகியவையும் போட்டியிடுகின்றன.