கங்கானா ரணாவத் நடிப்பில் பன்மொழி திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘தலைவி’ திரைப்படம் 2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்பட வெளியீட்டையொட்டி ஒட்டி படக் குழுவினர் நேற்று மாலை தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி, கிரியேட்டிவ் புரடியூசர் பிருந்தா, ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல், நடன இயக்குநர் காயத்திரி ரகுராம், நடிகை பாக்யஶ்ரீ, நடிகை மதுபாலா, நடிகர் தம்பி ராமையா, எழுத்தாளர் அஜயன் பாலா, பாடகி சைந்தவி, நடிகர் அரவிந்த்சாமி, நடிகை கங்கனா ரணாவத், இயக்குநர் விஜய் உட்பட திரைப்படக் குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் தம்பி ராமையா பேசும்போது, “கொரோனா முதல் அலைக்கு பிறகு ‘மாஸ்டர்’ படம் மக்களை தியேட்டருக்கு அழைத்து வந்தது. அதே போல் இந்த இரண்டாவது அலைக்கு பிறகு மக்களை அழைத்து வரும் படமாக இந்தத் ‘தலைவி’ திரைப்படம் இருக்கும்.
ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகில், பெண்களுக்கு முன்னுதாரணமாக வலம் வருகிறார் கங்கனா ரணாவத். அரவிந்த்சாமி எதிரிகளே இல்லாமல் அனைவராலும் விரும்பப்படும் நாயகன். அர்விந்தசாமி போல் அழகு எனக்கு இருந்தால் இந்நேரம் நான் ஜெயிலில் இருந்திருப்பேன் அல்லது இறந்திருப்பேன். ஆனால், தன்னடக்கத்துடன் இருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
சல்மானுக்கு ஜோடியாக நடித்த பாக்யஶ்ரீ மேடம் இப்படத்தில் சந்தியா அம்மாவாக நடித்துள்ளார். சமுத்திரகனி ஆர்.எம்.வீரப்பனாக மிக அற்புதமாக செய்துள்ளார். ஜெயலலிதா அம்மா வாழ்வில் யாரும் அறியாத ‘மாதவன்’ என்ற கதாப்பாத்திரத்தை எனக்கு இயக்குநர் தந்துள்ளார். உஙகளுடன் இணைந்து படத்தை பார்க்க நாங்களும் ஆவலாக உள்ளோம்..” என்றார்.