“மீண்டும் வில்லனாக நடிக்கத் தயார்…” என்று நடிகர் சத்யராஜ் அறிவித்துள்ளார்.
இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘எதற்கும் துணிந்தவன்’ பட விழாவில் பேசும்போது சத்யராஜ் இதைத் தெரிவித்தார்.
விழாவில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், ”நான் இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து எந்த நாயகனுக்கும், படத்தின் நாயகி பட்டம் வழங்கியதில்லை. ஆனால் சூர்யா போன்ற அழகான நாயகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை பிரியங்கா மோகன், ‘நடிப்பு நாயகன்’ என பட்டம் கொடுத்திருக்கிறார்.
நானும் இதுவரை ஏராளமான நடிகைகளுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஆனால், ஒரு நாளும் இது போன்ற ஒரு பட்டத்தை எந்த நடிகையும் எனக்கு வழங்கியதில்லை. ஆனால் ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகர்களுக்கு பட்டத்தை வழங்கியதை பார்த்திருக்கிறேன்.
ஏராளமான சுவர்களில் ‘வள்ளல் சூர்யா’ என்று எழுதி இருப்பார்கள். எங்கள் வீட்டுப் பிள்ளை சூர்யாவிற்கு ‘புரட்சி நாயகன்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பெரியாரின் தொண்டன் என்பதால், அது தொடர்பான ஒரு விழாவிற்கு கலந்து கொள்ள சென்றேன். அப்போது நான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் இயக்குநர், ‘சார் இதெல்லாம் ரிஸ்க். நீங்கள் மேடையேறி ஏதாவது பேச, அது படத்தின் பிசினசுக்கு நெகட்டிவா போய்விடும். அது மட்டுமல்ல உங்கள் மார்க்கெட்டே போய்விடும்’ என்றார். அப்போது அவரிடம், ‘மார்க்கெட் போனாலும் பரவாயில்லை. நான் பெரியாரின் தொண்டன் என்பதை ஒருபோதும் மறுக்க மாட்டேன். மறக்க மாட்டேன். நிச்சயம் அந்த விழாவில் கலந்து கொள்வேன்’ என்றேன்.
இன்று சூர்யாவின் படங்களில் தொடர்ச்சியாக பெரியாரின் புகைப்படங்களும், அம்பேத்கரின் புகைப்படங்களும் இடம் பெறுகின்றன. ‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’ போன்ற படங்களில் பெரியார், அம்பேத்கார் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பார். எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது.
இந்தப் படத்தில் வினய் அவர்களின் வில்லத்தனத்தை பார்த்துவிட்டு சூர்யா ரசிகர்களுக்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். பொருத்தமான கதாபாத்திரம் அமைந்தால் நான் மீண்டும் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன்.
ஏனெனில் ஒரு தலைமுறைக்கே நான் வில்லன் நடிகர் என்பது தெரியாமல் போய்விட்டது. தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும், அட்டகாசமான வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன்…” என்றார்.