Friday, April 12, 2024

மழையால் சரிந்த பிரம்மாண்டமான செட்..! நூலிழையில் உயிர் தப்பிய படக் குழு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார்.

‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல் துறையினரின் அத்துமீறல்களையும், அடாவடித்தனத்தை வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நடித்த சுரேஷ் ரவி, இப்படத்தில் காவல்துறையின் பெருமையையும், அவர்களுடைய நேர்மையையும்
வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார்.

நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை – கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, முனிராஜ் கலையை நிர்மாணிக்கிறார்.  நடன காட்சிகளை சந்தோஷ் வடிவமைக்கிறார்.

பல்லவ மன்னர்களில் முக்கியமானவரான நந்தி வர்மனைப் பற்றி இதுவரை சொல்லப்படாத ஒரு உண்மை தகவலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் சில வரலாற்று காட்சிகளை படமாக்குவதற்காக செங்கல்பட்டு பகுதியில் பிரம்மாண்டமான அரங்குகளை படக் குழுவினர் அமைத்துள்ளனர். அதில் முக்கியமாக, அக்காலத்து குரு குலம் ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாக்கியுள்ளனர்.

படத்தின் மிக முக்கியமான காட்சியை படமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த குரு குலம் செட், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் முழுவதும் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது.

மேலும், இந்த விபத்து நிகழும் போது அந்த இடத்தில் படக் குழுவை சேர்ந்த ஐந்து பேர் இருந்துள்ளனர். விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த ஐந்து பேரும் அங்கிருந்து வெளியேறியதால், நூலிழையில் உயிர் தப்பினார்கள்.

இது குறித்து கூறிய இயக்குநர் பெருமாள் வரதன், “இந்த விபத்தால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், விபத்தில் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்தது பெரும் ஆறுதலாக இருக்கிறது. குறிப்பாக விபத்து நடக்கும்போது அங்கிருந்த படக் குழுவினர், நூலிழையில் உயிர் தப்பினார்கள். இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

உற்சாகத்தோடு படப்பிடிப்பை தொடங்கிய எங்களுக்கு எதிர்பாராத இந்த விபத்து சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், இதில் இருந்து மீண்டு, மீண்டும் படப்பிடிப்பை விரைவில் துவக்குவோம்.” என்றார்.

- Advertisement -

Read more

Local News