Friday, April 12, 2024

“நடிகர் சூர்யாவுக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது..?” நடிகர் சிவக்குமார் சொன்ன ரகசியம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளைப் பற்றி அவரது தந்தையும், நடிகருமான சிவக்குமார் ‘ஓ மை டாக்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசினார்.

இது குறித்து நடிகர் சிவகுமார் பேசுகையில், ”கடந்தாண்டு ‘ஜெய் பீம்’ படம் வெளியானது. அந்தச் சினிமாவைப் பார்த்துவிட்டு தமிழக அரசு “இருளர்கள் எனும் பழங்குடியினர் எங்கெங்கு வசித்து வருகிறார்கள்? என ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது. “நவம்பர் மாத இறுதிக்குள் பட்டியலை தயாரிக்க வேண்டுமென” ஆட்சியருக்கு உத்தரவிடுகிறார்கள். “அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குடும்ப அட்டை வழங்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டது.  தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரையிலும் நடக்காத விசயம் அந்த ‘ஜெய் பீம்’ படத்தினால் நடந்தது.

அந்தப் படத்தை உருவாக்கும்போது இதுவெல்லாம் நடைபெறும் என்று யாருமே நினைக்கவில்லை. சூர்யா, நீதியரசர் சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது. என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் ‘ஜெய் பீம்’தான்.

எனக்கும், என்னுடைய துணைவியாருக்கும் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், இந்தப் பையன்(சூர்யா) என்ன ஆகப் போகிறான்..?” என்று வருத்தப்பட்ட காலம் அது. ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் அவன் நாலு வார்த்தை பேசினால் அது அதிசயம்தான்.

‘ஹோலி ஏஞ்சல்ஸ்’ என்ற பள்ளிக் கூடத்திற்கு அவனை மாற்றினோம். அங்கு எல்லாமே ஆங்கிலம்தான். இவனுக்கு தொடர்பில்லாத ஏரியா அது. வகுப்பறையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருப்பான்.

ஆசிரியர் கேள்வி கேட்டால், அப்படியே பத்தாவது வரிசைக்கு தப்பி விடுவான். பத்தாவது வரிசைக்கு கேள்வி வரும்போது, அங்கிருந்து மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்து விடுவான். மூன்றாவது வரிசையில் இருக்கும் போது கேள்வி கேட்டால், கடைசி வரிசைக்கு சென்று விடுவான். வாழ்நாள் முழுவதும் கேள்வியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் யோசித்த பையன் அவன்.

அந்த பள்ளி 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்கிற பள்ளி. அதனால் எங்களை அழைத்து பேசினார்கள். உங்கள் பையனை வேறு பள்ளியில் படிப்பை தொடர செய்யுங்கள் என கேட்டுக் கொண்டனர்.

நாங்களும் வேறு வழி இல்லாமல் ‘செயின்ட் பீட்ஸ்’ என்ற பள்ளியில் சேர்க்க திட்டமிட்டோம். அந்தப் பள்ளியில் வழக்கம்போல் நன்கொடை கேட்டனர். நாங்களும் வழங்கினோம்.

அப்போது நான் 175 படங்களில் நாயகனாக நடித்து திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டம். 1980=88 காலகட்டம் என்று நினைக்கிறேன். செயின்ட் பீட்ஸ் பள்ளிக்கூட வாசலில் வேகாத வெயிலில் வரிசையில் நின்று இருக்கிறேன்.

நான் வரிசையில் நிற்பதை சூர்யா பார்த்துக் கொண்டே இருக்கிறான். இறுதியாக  பள்ளிக்கூட முதல்வரைச் சந்தித்தேன். “நன்கொடை ஓகே. பள்ளியில் படிப்பதற்கான சீட் கிடைத்த பிறகுதான் நன்கொடையை ஏற்றுக் கொள்வோம்” என்றார்.

அந்த நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் “அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன்” என்று கதறி அழுதான். “எங்க அப்பாவை ரோட்டுல நிக்க வைச்சுட்டாங்க..” என்று சொல்லி கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். அதன் பிறகு நாங்கள்தான் அவனை சமாதானம் செய்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தோம்.

அதன் பிறகு கல்லூரி படிப்பிற்காக ‘லயோலா கல்லூரி’க்கு சென்றோம். அந்தக் கல்லூரியின் முதல்வரிடம், “சூர்யாவுக்கு காலேஜ் சீட் வேண்டும்” என கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், “ஒரு சீட்டை வீணடிக்காதீர்கள்..” என்று சொன்னார்.  நான் “ஏன்?” என்று கேட்டேன். “நடிகர் பாலாஜியின் பையன், சிவாஜியின் பையன், கொட்டாரக்கரா பையன்… என திரையுலகினரின் வாரிசுகள் யாருமே இங்கே பட்டப் படிப்பை நிறைவு செய்யவில்லை…” என சொன்னார். “என் பையன் நிறைவு செய்வான்” என அவரிடம் உறுதியளித்தேன். அரைகுறை மனதுடன் சம்மதித்து சீட் தந்தார்.

ஃபர்ஸ்ட் இயர், செகண்ட் இயர் என ஒவ்வொரு வருடமும் சூர்யாவின் அரியர்ஸ் பாடங்கள் உயர்ந்தது. அப்போது அவனிடம், “டிகிரியை முழுசா முடிக்கணும். இல்லையென்றால்..” என்று கோபமாக சொன்னேன் அதன் பிறகு பாடுபட்டு படித்து, பட்டப் படிப்பை நிறைவு செய்தான்.

அதன் பிறகு அவனிடம் “தொடர்ந்து எம்.காம் படி” என்று சொன்னேன். எனக்கு படிப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டான். “படிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை…” என்று சொன்ன பையன், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தான்.

அப்போது இயக்குநர் வசந்த் ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு செல்ல இருந்தார். அந்த நிகழ்ச்சியில் என்னையும் உடன் அழைத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வருகை தந்தார். என்னை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சூர்யா காரில் வந்திருந்தார்.

அப்போது என்னுடைய நண்பர் டாக்டர் ஒருவர் சூர்யாவை, “இவர் சிவகுமாரின் பையன் சரவணன்” என இயக்குநர் வசந்த்திடம் அறிமுகப்படுத்தினார். பிறகு ஒரு வாரம் கழித்து என்னை தொடர்பு கொண்ட இயக்குநர் வசந்த், “சார் உங்கள் பையனை நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதமா?” என கேட்டார். அப்போது அவரிடம் “அவனுக்கு அது போன்ற எண்ணம் எதுவும் இல்லை. அவனுக்கு நடனமாடவே தெரியாது. சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது. தொடர்ச்சியாக எங்களிடமே நாலைந்து வார்த்தை பேச மாட்டான்…” என சொன்னேன். ஆனால் வசந்தோ, “எனக்கும் இது போன்ற பையன்தான் வேண்டும்…” என்றார்.

டெஸ்ட் சூட்டிற்காக மணிரத்னம் அழைத்ததாக சூர்யாவை அழைத்துச் சென்றார் வசந்த். அப்போதுகூட அவரிடம் “அவன் வாழ்க்கையே நாசம் செய்து விடாதீர்கள்” என்றுதான் அறிவுறுத்தினேன். பிறகு வசந்த் இயக்கத்தில் அந்தப் படம் துவங்கியது. அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு ஒரு நாளும் நான் செல்லவில்லை. என்னுடைய துணைவியார்தான் சென்று வந்தார்.

அந்தப் படம் வெளியானபோது நான் எனது படத்தின் படப்பிடிப்பிற்காக ஆலப்புழையில் இருந்தேன். இந்தப் படம் சென்னையில் ‘காசி’ திரையரங்கில் வெளியானது. முதல் காட்சி நிறைவடைந்த பின், மிகுந்த பதட்டத்துடன் அங்கு நின்றிருந்தான் சூர்யா. அங்கிருந்த ஒருவர் சூர்யாவிடம் கை குலுக்கி “சூப்பராக சொதப்பிவிட்டீர்கள்…” என்று விமர்சனம் செய்திருக்கிறார். அதிர்ச்சியில் உறைந்து நின்றான் சூர்யா.

ஆறு மணி காட்சி.. அதன் பிறகு இரவு காட்சி… என அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு காட்சிகளும் அந்தப் படத்தைப் பார்த்தான் சூர்யா. அதன் பிறகு எனக்கு போன் செய்து, “அது நானாப்பா.. நானா அப்பா அது.. வசந்த் சார் பத்து கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார். அவர் இன்னும் நூறு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம். டொரன்ட்டோவிலிருந்தும்… வாஷிங்டனிலிருந்து போன் செய்தார்கள். “படம் பார்த்தேன். பல காட்சிகளில் நீ நல்லா நடிக்கலை…” என்று சொன்னதாகச் சொல்லி வருத்தப்பட்டான்.

திரையுலகில் ஒன்றுமே தெரியாமல் நுழைந்த பையன். வரிசையாக இரண்டு, மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. அவனது எட்டாவது படத்தில்தான் பாலா என்ற ஒரு படைப்பாளி வந்து சூர்யாவை செதுக்கினார்.

இந்தப் பையன் தற்போது ‘ஜெய் பீம்’ என்றொரு படத்தை தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன்தான் தீர்மானிக்கிறான்.

இவர்கள் இருவரும் அடைந்த உயரத்திற்கு மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன்….” என்றார்.

- Advertisement -

Read more

Local News