1990-களில் பிசியாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அவர் நடித்த பல படங்கள் 100 நாட்கள், வெள்ளி விழா என தொடர் வெற்றிகளை கண்டது. ‘கரகாட்டக்காரன்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ ஆகியவை இவர் நடிப்பில் வெளியான முக்கியமான படங்கள். கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ என்ற படத்தில் நடித்திருந்தார் ராமராஜன்.
தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘சாமானியன்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இந்தப் படத்தில் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். நக்ஷரா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.
அச்சு ராஜாமணி இசையில் உருவாகும் இப்படத்திற்கு அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராகேஷ் இயக்குகிறார். எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகிறது. இது ராமராஜனின் 45-வது படமாகும்.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் தி.நகர் கிருஷ்ண வேணி தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராமராஜன் பேசும்போது, “இப்போது 10 வருடங்களுக்கு பிறகு நான் நடிக்க வந்திருக்கிறேன். அப்போதே தொடர்ந்து நடித்திருப்பேன். ஆனால், அரசியல் பணிகள் வந்ததால் நடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு பெரிய விபத்தில் சிக்கி வருடக் கணக்காக ஓய்வெடுக்க வேண்டியதாகி விட்டது.
என்னுடைய ‘கரகாட்டக்காரன்’ படம் இதே கிருஷ்ணவேணி தியேட்டரில் அன்று 300 நாட்கள் ஓடியது. இன்று அதே தியேட்டரில் என்னுடைய படத்தின் விழா நடப்பது சந்தோஷமாக இருக்கிறது. அது மட்டுமா… என்னுடைய பட விழா ஒன்றில் இத்தனை மைக், இத்தனை கேமராக்களை நான் பார்ப்பது இதுதான் முதல்முறை.
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ‘ஒரு வார்த்தை கொல்லும்; ஒரு வார்த்தை வெல்லும்’ என்பதுபோல இப்போது மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன்.
இந்தப் படத்தில் நான் ஹீரோ என்பதைவிட கதையும், திரைக்கதையும்தான் ஹீரோ என்று சொல்லலாம். இந்தப் படத்தின் டீசரை பார்த்துவிட்டு ராமராஜன் துப்பாக்கி புடிச்சு என்ன பண்ணப் போறார் என்றுதான் பலரும் கேட்பார்கள். அதற்கான விடை இந்த படத்தில் இருக்கிறது.
இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப் போய் மோசமான படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் நான் பின் தொடர்வது புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பாதையை. அதனால்தான் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவும் எனக்கு பிடிக்காது.
இந்த 45 வருடங்களில் 45 படங்களில் நடித்துவிட்டேன். சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை நான் தாடி வைத்ததே இல்லை. இந்தப் படத்திற்காக முதன்முறையாக தாடி வைத்து நடிக்கிறேன்.
இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் கூறியபோது அவர் சொன்ன இன்டர்வல் காட்சியை கேட்டு திகைத்துவிட்டேன். இதுவரை தமிழ் சினிமாவிலேயே வந்திராத அப்படி ஒரு இன்டர்வெல். அதுமட்டுமல்ல இந்தப் படத்தின் டைட்டில் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது.
ஒரு படத்தின் டைட்டில் என்பது படத்திற்கு உயிர் போன்றது. படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும்போதுகூட அதற்கென தனியாக ஒரு டைட்டில் வைக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்தபோது நாள், நேரமெல்லாம் கணித்து அலசி ஆராய்ந்து, கண்ணன் என பெயர் வைத்துவிட்டு இரண்டாவது குழந்தை பிறக்கும்போது கண்ணன்-2 என யாராவது பெயர் வைக்கிறார்களா..? என்னிடம்கூட ஒரு சிலர் ‘கரகாட்டக்காரன் 2’ எடுக்கலாமா என கேட்டபோது அப்படியே அவர்களை ஆஃப் பண்ணிவிட்டேன். இயக்குநர் விஜய் மில்டன் ‘கோலிசோடா-2’-வில் நடிக்கிறீர்களா என கேட்டு வந்தபோது மறுத்துவிட்டேன்.
50 படங்களில் நடித்துவிட்டு அதன் பிறகு டைரக்சன் பக்கம் போய்விடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. இப்போது இது என்னுடைய 45-வது படம். இது போதும் எனக்கு.
முதல்முறையாக எனது படம் 5 மொழிகளில் வெளியாகிறது என்பதை இப்போது நினைத்தாலும் இது கனவா இல்லை நனவா என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ராகேஷை பார்க்கும்போது என்னை முதன்முதலாக ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் வி. அழகப்பன் போன்றே எனக்கு தோன்றுகிறார்.
இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு படத்தை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கும் இயக்குநர் ராகேஷுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.