300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாய் எடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கும் ‘சூர்யபுத்ர மகாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கப் போவதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
80 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு இப்போது 300 கோடியைத் தொட்டிருக்கும் இந்தக் ‘கர்ணா’ திரைப்படத்தை பாலிவுட்டின் பிரபலமான நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படம் 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோதே இந்தப் படத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார் நடிகர் விக்ரம்.
சில நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அப்போது அறிமுக வீடியோவுக்காக சில, பல காட்சிகளும் படமாக்கப்பட்டன.
ஆனால், அதன் பிறகு பல முறை அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டு வந்த நிலையில், இப்போது விக்ரம் பல்வேறு படங்களின் படப்பிடிப்பில் சிக்கியிருப்பதால் ‘கர்ணா’ படத்தில் அவரால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.
இப்போது விக்ரம் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் தன் மகனுடன் நடிக்கும் படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.
‘கோப்ரா’ படத்துக்காக ரஷ்யாவில் 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறார். அது முடிந்து இந்தியா திரும்பியவுடன் மீண்டும் இதே படத்துக்காக கொல்கத்தா மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது.
இதற்கடுத்து தன் மகன் துருவ் விக்ரமுடன் அவர் இணைந்து நடிக்கும் அவரது 60 வது படத்தின் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்கிறார். இந்தப் படம் மார்ச் முதல் வாரத்தில் துவங்கவிருக்கிறது. இதற்காக விக்ரம் மொத்தமாக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
இதை முடித்துவிட்டு ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மீண்டும் நடிப்பதற்காக விக்ரம் சென்றாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் ‘கர்ணன்’ படத்தில் விக்ரம் நடிப்பது சந்தேகமே என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.