சீயான் விக்ரமின் நடிப்பில் அடுத்து வரவிருப்பது ‘கோப்ரா’ திரைப்படம்.
’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தில் 12 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்திருக்கிறார். இதே படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார்.

இர்பான் பதானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ‘கோப்ரா’ படக் குழுவினர் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து டிவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது ‘கோப்ரா’ படத்தில் இர்பான் பதானின் கேரக்டர் பெயரையும் வெளியிட்டு அவரை வாழ்த்தியிருக்கிறார். கூடவே பதானுக்கென்றே தனியாக போஸ்டரையும் அந்தப் படக் குழு வெளியிட்டுள்ளது.

இந்தக் ‘கோப்ரா’ படத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சர்வதேச போலீஸ் துறையின் அதிகாரியாக ‘அஸ்லான் எல்மாஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் இர்பான் பதான் நடிக்கிறார் என்ற தகவலை அஜய் ஜானமுத்து தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியிருக்கின்றன.