தமிழ்நாட்டில் மொத்தம் 1,145 தியேட்டர்கள் உள்ளன. இதில், ‘மால்’களில் உள்ள தியேட்டர்களும் அடங்கும். சுமார் 20 வருடங்களுக்கு முன்புவரை தியேட்டர்களுக்குப்போய் படம் பார்ப்பதுதான் எல்லோருடைய பொழுதுபோக்காக இருந்தது.
தொலைக்காட்சிகளில் தொடர்கள் ஒளிபரப்ப தொடங்கிய பின், தியேட்டர்களுக்கு வரும் பெண்கள் கூட்டம் குறைய ஆரம்பித்தது. பெண்கள் வீட்டிலேயே அமர்ந்து டி.வி. தொடர்களை ரசித்து பார்க்க தொடங்கினார்கள்.
நாளடைவில் தியேட்டருக்குப்போய் செலவு செய்து படம் பார்ப்பதைவிட, வீட்டிலேயே உட்கார்ந்து படங்களையும், தொடர்களையும் பார்ப்பதை பெண்கள் சவுகரியமாக உணர்ந்தார்கள்.
இதோடு திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் சவால் விட்டு படங்களை வெளியிடுவதால் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் மேலும் குறைந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக கொரோனா நோய் பாதிப்பு, பொதுமக்கள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தியேட்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு மிக மிக குறைந்தது.
இடையில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றதால் அடுத்தடுத்த படங்களுக்கும் அதேபோல் கூட்டம் அலைமோதும் என்று தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் நினைத்திருந்தார்கள்.
ஆனால் நடந்ததோ வேறு. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு வெளியான எந்த ஒரு படத்திற்கும் இப்போதுவரையிலும் ஒரு காட்சிகூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்பது வருந்ததக்க விஷயம்.
ஒவ்வொரு காட்சிக்கும் 10, 20, 30 என்று இரட்டை இலக்கத்திலேயே கூட்டம் கூடியிருக்கிறது. சனி, ஞாயிறுகளில் மட்டுமே மூன்றிலக்கத்திற்கு ரசிகர்களின் எண்ணிக்கை ஏறுகிறதாம்.
சமீபத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு முதல் மூன்று நாட்கள் மட்டுமே கொஞ்சம் மூச்சுவிடும் அளவுக்கு சராசரியாக 200 பேர் ஒவ்வொரு காட்சிக்கும் வந்துள்ளனர். ஆனால் திங்கள் முதல் மீண்டும் கலெக்சன் படுத்துவிட்டது.
பல ஊர்களில், பல தியேட்டர்களில் இரவுக் காட்சிகளை ரத்து செய்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான இரண்டு தமிழ்த் திரைப்படங்களின் முதல் காட்சியே கூட்டம் வராததால் ரத்து செய்யப்பட்டது.
இப்படி வரும் சின்ன அளவு வருமானத்தை வைத்து அந்தத் தியேட்டரின் மாத மின்சாரக் கட்டணத்தைக்கூட கட்ட முடியாது. ஒரு சில மால் தியேட்டர்களில் ஒரேயொரு ரசிகர் வருகை தர.. அவருக்காக அந்தக் காட்சியை ஓட்டியிருக்கிறார்கள். இந்தக் கொடுமையெல்லாம் தற்போது தொடர்ந்து பல ஊர்களில் நடந்து வருகிறது.

இது பற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளரான பன்னீர்செல்வம் பேசும்போது, “கடந்த ஒரு மாத காலமாக தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. சிறந்த கதையம்சம் உள்ள படங்களுக்கு கூட, கூட்டம் வருவதில்லை. ஒரு காட்சிக்கு பத்து அல்லது பதினைந்து பேர்களே வருகிறார்கள்.
ஒரு பெரிய கதாநாயகன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் நன்றாகவே இருந்தது. இருப்பினும் அந்த படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. கடந்த வாரம் வந்த 2 நல்ல படங்களுக்கும் இதே நிலைதான். இதனால் பெரும்பாலான தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
10, 15 பேர்களை வைத்து நாங்கள் படத்தை ஓட்ட முடியாது. மின்சார கட்டணத்துக்கே இது போதாது. தியேட்டர் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாது. குறைந்தபட்சம் ஒரு காட்சிக்கு 100 பேர்களாவது வந்தால்தான் எங்களால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்.
இப்போது உள்ள நிலை நீடித்தால், மிக சீக்கிரமாகவே தியேட்டர்களை மூட வேண்டி வரும்..” என்றார்.