‘லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தேலா, இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். குறிப்பாக, தெலுங்கில் வெளியான ‘டாக்குமகராஜ்’ திரைப்படத்தில், பாலகிருஷ்ணா வாசிப்பதைக் கேட்டு நடனமாடும் காட்சியில் நடித்த ஊர்வசி, அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது.

இந்த நிலையில், பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஊர்வசி ரவுத்தேலா, தனது எதிரிகளை குறிவைத்து, தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு பணம் செலுத்தி தன்னை குறை கூறும் டிரோல்கள் உருவாக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “உலகம் முழுவதும் உள்ள என் ரசிகர்களுக்கும், கேன்ஸ் விழா குழுவினருக்கும் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், என் புகழை பாழாக்க முயலும் சிலர், பணம் கொடுத்து என்னை நோக்கிய டிரோல்களை உருவாக்குகின்றனர். ஆனால் இது என் புகழை பாதிக்க முடியாது. நான் மற்றவர்கள் போல் உங்களுக்குப் பணம் செலுத்த மாட்டேன். என் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேச அளவில் கிடைத்துள்ள பாராட்டுகள் மூலம் நான் உருவாக்கிய கவர்ச்சி, எவராலும் தீண்ட முடியாதது. எனவே என் மீது எந்தவொரு தவறான திட்டமும் வெற்றியடையாது” என ஊர்வசி ரவுத்தேலா உறுதியுடன் தெரிவித்துள்ளார்.